Paristamil Navigation Paristamil advert login

தேசிய கல்விக்கொள்கை தேவையில்லை; அமைச்சர் ராஜ்மோகன்

தேசிய கல்விக்கொள்கை தேவையில்லை; அமைச்சர் ராஜ்மோகன்

30 வைகாசி 2026 சனி 08:20 | பார்வைகள் : 134


தமிழகத்திற்கு, மாநில பாடத்திட்டமே சிறந்தது,'' என, பள்ளிக் கல்வி துறை அமைச்சர் ராஜ்மோகன் கூறினார்.

சென்னை, சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள தனுக்கோடி நடுநிலைப் பள்ளியில், புதிதாக சேர்ந்த மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கி, மலர் மாலை அணிவித்து, இலவச பாடப்புத்தகங்கள், சீருடை உள்ளிட்டவற்றை, அமைச்சர் ராஜ்மோகன் வழங்கினார்.

பின், அவர் அளித்த பேட்டி:

தமிழக அரசு பள்ளிகளில் இந்தாண்டு நான்கு லட்சம் மாணவ - மாணவியரை சேர்க்க இலக்கு நிர்ணயித்துள்ளோம். இதுவரை, ஒரு லட்சத்து, 52,625 மாணவ- மாணவியர் சேர்ந்துள்ளனர்.

நான் அமைச்சராக பொறுப்பேற்றதும், அரசு பள்ளிகளில் குடிநீர் வசதி, தண்ணீருடன் கூடிய பாதுகாப்பான கழிப்பறை உள்ளிட்ட உள்கட்டமைப்புகளை மேம்படுத்தவும், பெரம்பலுாரில் மாதிரி பள்ளிக்கு சொந்த கட்டடம் கட்டுவதற்கும் தான் முதல் கையெழுத்து போட்டேன்.

ஆசிரியர் பற்றாக்குறையை சரி செய்ய, நிலுவையில் உள்ள வழக்குகளை முடிக்க, அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம்.

இருமொழி கொள்கை என்பது, த.வெ.க.,வின் மரபணுவில் உள்ளது. அதனால் தான், சட்டப்பூர்வமாக தமிழ்த்தாய் வாழ்த்துக்கு உரிய அங்கீகாரம் கிடைக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம்.

அதேபோல், உதவிபெறும் பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி கற்பிக்கவும், மாணவர்களுக்கு ஆங்கிலத்தை எளிமையாக புரிய வைக்கவும், சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்படும்.

தற்போது, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மன்றமான எஸ்.சி.இ.ஆர்.டி., தொடக்கப் பள்ளியில், 1, 2, 3ம் வகுப்புகளுக்கான பாடப்புத்தகங்களை அற்புதமாக வடிவமைத்துள்ளது.

அதில் உள்ள அழகழகான வண்ணப்படங்கள் குழந்தைகளை மிகவும் கவரும். அந்த புத்தகங்களை குழந்தையை அள்ளியெடுப்பது போல அள்ளி எடுத்தேன்.

அதனால், தேசிய கல்விக் கொள்கை எல்லாம் நமக்கு தேவையில்லை. எஸ்.சி.இ.ஆர்.டி.,யின் பங்களிப்பில், மாநிலப் பாடத்திட்டமே சிறந்தது; அதுவே போதுமானது தான்.

இவ்வாறு அவர் கூறினார்.