Paristamil Navigation Paristamil advert login

பாலியல் குற்றங்களை தடுக்க விரைவில் வழிகாட்டு விதிமுறைகள்: ஐகோர்ட்டில் அரசு தகவல்

பாலியல் குற்றங்களை தடுக்க விரைவில் வழிகாட்டு விதிமுறைகள்: ஐகோர்ட்டில் அரசு தகவல்

30 வைகாசி 2026 சனி 06:14 | பார்வைகள் : 155


பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்க, விரிவான வழிகாட்டு விதிமுறைகள் வகுக்கப்பட உள்ளதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழக அரசு தெரிவித்துள்ளது.  

கோவை மாவட்டம், சூலுாரில் 10 வயது சிறுமி கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் தொடர்புடைய கார்த்திக் உள்ளிட்டோரை, போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், 'இந்த வழக்கில் சுதந்திரமான, வெளிப்படையான விசாரணைக்கு, மூத்த போலீஸ் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழு அமைக்க வேண்டும். இந்த வழக்கு தொடர்பாக செய்திகள் வெளியிட தடை விதிக்க வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றத்தில், விஷ்வ ஹிந்து பரிஷத் வட தமிழ்நாடு தலைவர் பி.சொக்கலிங்கம் பொது நல வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு, நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், வி.லட்சுமி நாராயணன் அடங்கிய அமர்வில்,  மீண்டும் விசாரணைக்கு வந்தது.

தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயணன் ஆஜராகி வாதாடியதாவது:

இது, ஒரு பயங்கரமான நிகழ்வு. மிகச் சிறந்த முறையில் காவல் பணிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், சில சமயங்களில் இத்தகைய நிகழ்வுகளை தடுத்து நிறுத்த முடியவில்லை.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு எதிராக சிறப்பு கவனம் செலுத்தி, அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. சமூக வலைதளங்களில் பரவும் வீடியோக்களை நீக்க, அமெரிக்காவை சேர்ந்த இன்ஸ்டாகிராம் நிறுவனத்தை கேட்டுள்ளோம்; வீடியோக்களை நீக்க குறைந்தபட்சம் ஏழு நாட்கள் ஆகும்.  பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்க, விரிவான வழிகாட்டு விதிமுறைகள் வகுக்கப்பட உள்ளன. இவ்வாறு அவர் வாதாடினார்.

இதையடுத்து நீதிபதிகள், 'விசாரணையை எவ்வாறு நடத்த வேண்டும் என, போலீசுக்கு எப்படி உத்தரவிட முடியும்; விசாரணை சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது. எல்லா நேரங்களிலும் போலீசாரை சந்தேகிக்க முடியாது. இந்த மனு தொடர்பாக விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும்' என தெரிவித்தனர்.