மகனுக்கு துணை முதல்வர் பதவி கேட்கிறார் சித்தராமையா
30 வைகாசி 2026 சனி 05:11 | பார்வைகள் : 979
கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததற்கு பிரதிபலனாக தன் மகனுக்கு துணை முதல்வர் பதவி வழங்க வேண்டும்' என, காங்கிரஸ் மேலிடத்தில் சித்தராமையா கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கர்நாடக முதல்வராக இருந்த சித்தராமையா நேற்று முன்தினம் தன் பதவியை ராஜினாமா செய்தார். பதவி விலகிய கையோடு டில்லிக்கு பறந்தார். புதிய முதல்வராக உள்ள சிவகுமாரும் டில்லி சென்றார்.
ஜன்பத் சாலையில் உள்ள சோனியாவின் வீட்டிற்கு சித்தராமையா சென்றார். லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், வீட்டு வாசலில் அவரை கட்டி தழுவி, வரவேற்றார். வீட்டிற்குள் சென்று சோனியா, ராகுல், பிரியங்காவுடன் ஆலோசனை நடத்தினார்.
பின், காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயை, சித்தராமையா சந்தித்தார். இந்த சந்திப்பின் போது, அவரது மகன் யதீந்திராவையும் அழைத்து சென்றார்.
எந்தவித பிரச்னையும் செய்யாமல் பதவியை ராஜினாமா செய்த, சித்தராமையாவுக்கு, கார்கே நன்றி தெரிவித்தார். பதவி விலகியதற்கு கைமாறாக தன் மகன் யதீந்திராவுக்கு, துணை முதல்வர் பதவி வழங்க வேண்டும் என்று கார்கேயிடம், சித்தராமையா கோரிக்கை வைத்ததாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலிட தலைவர்களுடன் ஆலோசித்து நல்ல முடிவு எடுப்பதாக, கார்கேயும் வாக்குறுதி அளித்ததாக கூறப்படுகிறது. யதீந்திராவுக்கு துணை முதல்வர் பதவி கிடைக்கலாம் அல்லது செல்வாக்கு மிக்க துறையின் அமைச்சர் பதவி கிடைக்கலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.
சித்தராமையாவின் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த, அமைச்சர்களில், 13 முதல், 16 பேரை மட்டும் தக்க வைத்து கொண்டு, மீதம் உள்ளவர்களை கழற்றி விட சிவகுமார் முடிவு செய்து இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
இதற்கிடையே, அமைச்சர் பதவியை எதிர்பார்க்கும் மூத்த எம்.எல்.ஏ.,க்கள், தங்களுக்கு பதவி கேட்டு டில்லியில் முகாமிட ஆரம்பித்து உள்ளனர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Annonces
Ajouter
Annuaire