பசில் ராஜபக்ஷவை கைது செய்து ஆஜர்படுத்துமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு
29 வைகாசி 2026 வெள்ளி 18:02 | பார்வைகள் : 1260
அரச நிதியை முறைகேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு விவகாரத்தில், முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட பலரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற ஊவா மாகாண சபை தேர்தலின் போது, இலங்கை சுற்றுலா ஊக்குவிப்புப் பணியகத்துக்கு சொந்தமான 7.8 மில்லியன் ரூபாய் நிதியை தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்காக முறைகேடாகப் பயன்படுத்தியதாக இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ, இலங்கை சுற்றுலா ஊக்குவிப்புப் பணியகத்தின் முன்னாள் தலைவர் பாஷ்வர குணரத்ன மற்றும் அதன் முன்னாள் முகாமைத்துவப் பணிப்பாளர் ரூமி ஜவ்பர் உள்ளிட்டோரை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கோட்டை நீதவான் பசன் அமரசேன உத்தரவிட்டுள்ளார்.
சட்ட மா அதிபரின் ஆலோசனையின் பேரில், பொதுச் சொத்துக்களுக்கு எதிரான குற்றங்கள் சட்டத்தின் கீழ் இந்த நபர்கள் சந்தேக நபர்களாகப் பெயரிடப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இன்று மனுவொன்றின் ஊடாக நீதிமன்றத்துக்கு அறிவித்ததை அடுத்தே நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Annonces
Ajouter
Annuaire