Paristamil Navigation Paristamil advert login

அதிமுகவில் சமாதானப்படலம்; இபிஎஸ் இடம் சரண் அடைந்தது வேலுமணி

அதிமுகவில் சமாதானப்படலம்; இபிஎஸ் இடம் சரண் அடைந்தது வேலுமணி

28 வைகாசி 2026 வியாழன் 08:22 | பார்வைகள் : 157


அதிமுக கோஷ்டிகள் இடையே ஏற்பட்டிருந்த மோதல் நீங்கி, இன்று இரு தரப்பும் ஒன்றாக இணைந்தனர்.

தமிழக சட்டசபை தேர்தலில், த.வெ.க., 108 தொகுதிகளில் வெற்றி பெற்றது. தி.மு.க., 59; அ.தி.மு.க., 47 தொகுதிகளிலும் வென்றன.தேர்தல் தோல்வி விரக்தியால் அதிமுகவில், அக்கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமி தலைமையில் 22 பேர்; முன்னாள் அமைச்சர் வேலுமணி தலைமையிலான அணியில் 25 பேர் என, இரண்டு அணியாக கட்சி எம்.எல்.ஏ.,க்கள் பிரிந்தனர்.

வேலுமணி அணி ஆதரவால், 144 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவுடன் முதல்வர் விஜய், சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபித்தார்.அமைச்சரவையில், வேலுமணி தரப்பு அமைச்சர் பதவியை எதிர்பார்த்தது. ஆனால், அமைச்சரவை விரிவாக்கத்தின் போது, அ.தி.மு.க., சேர்த்து கொள்ளப்படவில்லை. இதனால், வேலுமணி தரப்பு எம்.எல்.ஏ.,க்கள் விரக்தி அடைந்தனர். சிலர் பழனிசாமி பக்கம் செல்லத்துவங்கினர்.

இதற்கிடையே அதிமுக எம்எல்ஏக்கள் 4 பேர் ராஜினாமா செய்து ஆளும் கட்சியான தவெக பக்கம் சாய்ந்தனர். தங்கள் தரப்பு பலவீனம் அடைய தொடங்கியதை உணர்ந்த வேலுமணி தரப்பு எம்எல்ஏ.,க்கள் ஒவ்வொருவராக இபிஎஸ் பக்கம் சாயத் தொடங்கினர்.நிலைமை விபரீதம் ஆன நிலையில் வேலுமணி தரப்பினர் இறங்கி சமாதானத்துக்கு வந்தனர். இன்று வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் இபிஎஸ் வீட்டுக்கு சென்று பேச்சு நடத்தினர்.

இதையடுத்து இரு அணிகளும் ஒன்றாக இணைந்ததாக எம்எல்ஏ.,க்கள் கூறினர். தொடர்ந்து பேட்டி அளித்த முன்னாள் அமைச்சர் வேலுமணி, தங்களுக்குள் பிளவு எதுவும் ஏற்படவில்லை.கருத்து வேறுபாடு மட்டுமே இருந்ததாகவும் அது சரியாகி விட்டதாகவும் என்றுமே தங்கள் பொதுச் செயலாளர் எடப்பாடியார் தான் என்றும் தெரிவித்தார்.

கோஷ்டிகள் இணைப்பு நிகழ்ச்சிகளில் சிவி சண்முகம்  பங்கேற்கவில்லை. அவரை சமாதானம் செய்யும் முயற்சியில் வேலுமணி உள்ளிட்டோர் ஈடுபட்டுள்ளனர்.