Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் போலியான செய்திகள் குறித்து பிரதமர் அலுவலகம் எச்சரிக்கை!

இலங்கையில் போலியான செய்திகள் குறித்து பிரதமர் அலுவலகம் எச்சரிக்கை!

27 வைகாசி 2026 புதன் 13:53 | பார்வைகள் : 165


பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவின் பெயர், புகைப்படங்கள் மற்றும் காணொளிகளைப் பயன்படுத்தி சமூக ஊடகங்களில் பரவி வரும் போலியான செய்திகள் தொடர்பில் பிரதமர் அலுவலகம் எச்சரித்துள்ளது.

இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் பெயர், புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் ஆகியவற்றையும் பல்வேறு ஊடக நிறுவனங்களினதும், செய்தி இணையத்தளங்களினதும் உத்தியோகபூர்வ இலச்சினைகளையும் போலியாகப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட போலியான செய்திகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவது தெரியவந்துள்ளது.

பிரதமர் கருத்து தெரிவிப்பது போன்று சித்தரிக்கப்பட்ட போலியான காணொளிகள் மற்றும் பிரதமரின் புகைப்படத்தை உள்ளடக்கி உருவாக்கப்பட்ட போலிப் பதிவுகள் சிலரால் சமூக ஊடகங்களில் பதிவேற்றப்பட்டிருக்கின்றன.

இதன் மூலம் பல்வேறு தொழில்முயற்சிகள், வேலைவாய்ப்புகள் மற்றும் நாட்டின் பொருளாதாரம் மற்றும் வரிக்கொள்கைகள் ஆகியன குறித்த போலியான செய்திகள் உருவாக்கப்பட்டுள்ளன.

செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் நவீன தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தி இத்தகைய போலியான செய்திகள் உருவாக்கப்பட்டிருப்பதால், இத்தகைய செய்திகளைக் கண்டு ஏமாற வேண்டாமெனவும், இது குறித்து விழிப்புடன் இருக்குமாறும் அனைத்து மக்களையும் கேட்டுக்கொள்கின்றோம்.

அரசாங்கத்திற்கும் பிரதமரின் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் பாதிப்பு ஏற்படும் வகையில் இத்தகைய போலியான செய்திகளை உருவாக்குவதும், அவற்றைச் சமூக ஊடகங்கள் ஊடாகப் பரப்புவதும் சட்டத்தின்படி தண்டனைக்குரிய குற்றமாகும் என்றும் எச்சரித்துள்ளது.