Paristamil Navigation Paristamil advert login

மகன் -- மருமகன் போட்டி அரசியலை தமிழக மக்கள் விரும்பவில்லை: மோடி

மகன் -- மருமகன் போட்டி அரசியலை தமிழக மக்கள் விரும்பவில்லை: மோடி

19 சித்திரை 2026 ஞாயிறு 06:30 | பார்வைகள் : 214


மகனுக்கும், - மருமகனுக்குமான கொள்ளை போட்டி அரசியலை மக்கள் விரும்பவில்லை, என்று பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

கோவை கொடிசியா மைதானத்தில் நேற்று நடந்த பிரசார கூட்டத்தில், அவர் பேசியதாவது:

புத்தாண்டில் தமிழக அரசியலில் புதிய அத்தியாயம் எழுதப்படுகிறது. மக்கள் இந்த புத்தாண்டில் தே.ஜ., கூட்டணி 'இன்,' தி.மு.க., 'அவுட்' என்று தெளிவான முடிவில் உள்ளனர்.

கடந்த 2023ம் ஆண்டு மகளிருக்கு இட ஒதுக்கீடு கொடுக்கும் மசோதாவை அறிமுகப்படுத்தினோம். கடந்த 16ம் தேதி, பார்லிமென்டில் அந்த மசோதாவை நிறைவேற்ற வரலாற்று பூர்வமாக அடியெடுத்து வைத்தோம். துரதிர்ஷ்டவசமாக இந்த முயற்சி தோல்வியடைந்தது.

ஏன் எதிர்த்தீர்கள்? தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணியின் கீழ்த்தரமான அரசியலுக்கு இரையாகி விட்டது. இந்த மசோதா சட்டமாகியிருந்தால், சாதாரண பெண்கள் எம்.பி., - எம்.எல்.ஏ., ஆகியிருப்பர்.

ஒற்றை குடும்ப கட்சிகள், அதிகாரம் தங்களின் குடும்பத்திற்குள் மட்டுமே இருக்க வேண்டும் என்று ஆசைப்படுன்றன. பெண்களுக்கு பிரதிநிதித்துவத்தை உறுதி செய்யும் மசோதாவை ஏன் எதிர்த்தீர்கள் என்று தி.மு.க.,வினரிடம் மக்கள் கேட்க வேண்டும்.

கடந்த 11 ஆண்டுகளில் மத்திய அரசு, தமிழகத்திற்கு 14 லட்சம் கோடி ரூபாய் நிதியளித்துள்ளது. நெடுஞ்சாலை, விமான நிலையம், ரயில்வே உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களுக்கு பங்களித்துள்ளோம். இது, காங்கிரஸ் ஆட்சியில் வழங்கியதைவிட பல மடங்கு அதிகம்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழகத்தில் இரண்டு சாதனைகள் நிகழ்ந்துள்ளன. ஒரு குடும்பத்தின் சொத்துகள் அதிகரித்து, தமிழகத்தின் கடன் உயர்ந்துள்ளது.

தி.மு.க., 'டாப்' குடும்பம் செல்வந்தராகி கொண்டே போகிறது. மறுபக்கம் தமிழகத்தில் ஒவ்வொரு நபர் மீதான கடன் சுமை அதிகரித்துள்ளது.

குடும்பத்திற்கு, குடும்பத்தால், குடும்பத்திற்காக' என்பது தான் தி.மு.க.,வின் கொள்கை. முதல்வர், துணை முதல்வர், டில்லியின் முக்கிய எம்.பி., உள்ளிட்ட அனைவருமே ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தான். திரைப்படம், ஊடகங்கள் உள்ளிட்ட அனைத்தையும் ஒரு குடும்பம் கட்டுப்படுத்துகிறது.

தி.மு.க., மூத்த நிர்வாகிகளே குடும்பத்திடம் தலை குனிந்து செல்கிறது. யார் அதிகம் கொள்ளையடிப்பது என்பதில் மகன் - மருமகன் இடையே போட்டி நடைபெறுகிறது. தமிழகத்திற்கு தொலைநோக்கு பார்வையிலான திட்டங்கள் தான் அவசியம். மகன் - மருமகன் கொள்ளை போட்டி அவசியமில்லை.

மது மாபியா தி.மு.க., மற்றும் அவர்களின் டில்லி கூட்டாளிகளிடம் ஒற்றுமை உள்ளது. இரண்டு கட்சிகளிலும் மருமகன்களின் ஆதிக்கம் உள்ளது. அவர்களால் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது.

தி.மு.க.,வுக்கு விவசாயிகள் மீது அக்கறை இல்லை. எங்கள் டபுள் இன்ஜின் சர்கார் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும். தே.ஜ., கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன் சட்டம் - ஒழுங்கை சீரமைப்போம்.

நில அபகரிப்பு, மணல் கொள்ளையர்கள், மது மாபியாவுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுப்போம். போதை இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம். இது, ஆயிரக்கணக்கான இளைஞர்களின் வாழ்வை பாதுகாக்கும்.

தி.மு.க.,வின் ஊழல்களை முடிவுக்கு கொண்டு வருவோம். தி.மு.க.,வின் அனைத்து ஊழல், மோசடிகளை புலனாய்வு செய்து நடவடிக்கை எடுப்போம். பணி நியமனம் உள்ளிட்ட அனைத்திலும் வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

எழுத்துரு விளம்பரங்கள்