ஆர்டெமிஸ்-2 மிஷன் வெற்றி - நிலவுப் பயணத்தை முடித்து பூமிக்கு பாதுகாப்பாக திரும்பிய விண்வெளி வீரர்கள்
11 சித்திரை 2026 சனி 07:33 | பார்வைகள் : 160
நிலவுக்கு மனிதர்களை மீண்டும் அனுப்பும் முயற்சியின் ஒரு முக்கிய கட்டமாக, நாசா மேற்கொண்ட ஆர்டெமிஸ்-2 ( Artemis II) திட்டம் வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ், Orion spacecraft விண்கலம் மூலம் 4 விண்வெளி வீரர்கள் இந்த மாத தொடக்கத்தில் 10 நாள் பயணமாக விண்வெளிக்கு அனுப்பப்பட்டனர். இந்த குழுவில் ஒரு பெண் விண்வெளி வீரரும் இடம்பெற்றிருந்தார்.
இந்த பயணத்தின் போது, மனிதர்கள் இதுவரை சென்றிராத 4,06,771 கிலோமீற்றர் தொலைவை எட்டியதன் மூலம் புதிய சாதனை படைக்கப்பட்டது. மேலும், இந்த குழுவினர் நிலவைச் சுற்றி ஆய்வு மேற்கொண்டு, நிலவின் மறுபக்கத்தை நேரில் கண்டவர்கள் என்ற வரலாற்றுச் சாதனையையும் பதிவு செய்துள்ளனர்.
ஆய்வுப் பணிகளை வெற்றிகரமாக முடித்த பின்னர், விண்வெளி வீரர்கள் பூமியை நோக்கி திரும்பினர். அவர்கள் பயணித்த ஒரியன் விண்கலம், இலங்கை நேரப்படி சனிக்கிழமை அதிகாலை 5.37 மணியளவில், அமெரிக்காவின் San Diego நகரத்திற்கு அருகிலுள்ள பசுபிக் பெருங்கடல் ( Pacific Ocean ) பகுதியில் திட்டமிட்டபடி பாதுகாப்பாக இறங்கியது.
மூன்று பாராசூட்டுகளின் உதவியுடன் விண்கலம் கடலில் மெதுவாக இறங்கியது. இதில் பயணித்த 4 விண்வெளி வீரர்களும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
நிலவுக்கு மனிதர்களை மீண்டும் அனுப்பும் Artemis program முயற்சியின் முக்கிய முன்னேற்றமாக இந்த மிஷன் பார்க்கப்படுகிறது. எதிர்காலத்தில் மனிதர்களை நிலவில் தரையிறக்குவதற்கான அடித்தளத்தை இந்த சாதனை அமைத்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan