Paristamil Navigation Paristamil advert login

ஈரானின் ஆயுதத் துறைக்கு உதவும் நிறுவனங்களுக்கு எதிராக அமெரிக்கா அதிரடி நடவடிக்கை

ஈரானின் ஆயுதத் துறைக்கு உதவும் நிறுவனங்களுக்கு எதிராக அமெரிக்கா அதிரடி நடவடிக்கை

9 வைகாசி 2026 சனி 16:07 | பார்வைகள் : 184


ஈரான் மீது இஸ்ரேல் போர் தாக்குதலை மேற்கொண்ட நிலையில் தற்பொழுது போர் நிறுத்த பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

ஈரானின் ஆயுதத் துறைக்கு உதவுவதாக அடையாளம் காணப்பட்ட 10 தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது அமெரிக்க கருவூலத் துறை வெள்ளிக்கிழமையன்று தடைகளை அறிவித்துள்ளது.

ஈரானின் ஷாஹத் ட்ரோன்கள் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகளைத் தயாரிப்பதற்குத் தேவையான மூலப்பொருட்களைப் பெறுவதற்கான அதன் முயற்சிகளுக்கு உதவியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளின் பேரில், சீனா மற்றும் ஹொங்ஹொங்கில் உள்ள பல நிறுவனங்கள் உட்பட பலர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டோனல்ட் ட்ரம்ப் மற்றும் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் சந்திப்பானது சீனாவில் முன்னெடுக்கத் திட்டமிட்டிருந்த சில நாட்களுக்கு முன்னர், ஈரானுடனான போரை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சிகள் முடங்கியுள்ள நிலையிலும் கருவூலத் துறையின் இந்த நடவடிக்கை வெளிவந்துள்ளது.

மேலும், ஈரான் தனது உற்பத்தித் திறனை மீண்டும் உருவாக்குவதைத் தடுப்பதற்காக, அதன் இராணுவத் தொழில்துறை தளத்திற்கு எதிராகப் பொருளாதார நடவடிக்கை எடுக்கத் தயாராக இருப்பதாக கருவூலத்துறை அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

விமான நிறுவனங்கள் உட்பட, சட்டவிரோத ஈரானிய வர்த்தகத்திற்கு ஆதரவளிக்கும் எந்தவொரு வெளிநாட்டு நிறுவனத்திற்கும் எதிராக நடவடிக்கை எடுக்கத் தயாராக இருப்பதாகவும், ஈரானின் முயற்சிகளுக்கு உதவும் வெளிநாட்டு நிதி நிறுவனங்கள் மீது இரண்டாம் நிலைத் தடைகளை விதிக்கக்கூடும் என்றும் கருவூலத்துறை தெரிவித்துள்ளது.

சீனாவின் எண்ணெய் சுத்தீகரிப்பு நிறுவனங்களுடன் தொடர்புடையவர்களும் இதில் உட்படலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஹார்முஸ் நீரிணையில் இயங்கும் கப்பல்களையும் பிராந்திய நட்பு நாடுகளையும் அச்சுறுத்தும் ஈரானின் போக்கை கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டே கருவூலத்துறையின் நடவடிக்கைகள் அமைந்திருப்பதாக ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

பெப்ரவரி 28 அன்று அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானில் உள்ள ஏராளமான இலக்குகளைத் தாக்கியதைத் தொடர்ந்து, உலகின் கச்சா எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவில் ஐந்தில் ஒரு பங்கு கடந்துசெல்லும், ஈரான் மற்றும் ஓமானுக்கு இடையேயான குறுகிய போக்குவரத்துப் பாதையான ஹார்முஸ் நீரிணையை ஈரான் மூடியது.

இதனால் கப்பல் போக்குவரத்து மொத்தமாக ஸ்தம்பித்தது. எரிபொருள் விலை கடும் உயர்வை எட்டியது. இதனிடையே, வெளியான தகவல்களின் அடிப்படையில், ஈரான் ஒரு முக்கிய ட்ரோன் உற்பத்தியாளராக உள்ளது மட்டுமின்றி மாதத்திற்கு சுமார் 10,000 ட்ரோன்களை உற்பத்தி செய்யும் தொழில்துறை திறனைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.