Paristamil Navigation Paristamil advert login

மது அருந்தி வாகனம் ஒட்டிய வழக்கில் தவறை ஒப்புக்கொண்ட டேவிட் வார்னர்

மது அருந்தி வாகனம் ஒட்டிய வழக்கில் தவறை ஒப்புக்கொண்ட டேவிட் வார்னர்

9 வைகாசி 2026 சனி 14:00 | பார்வைகள் : 139


மது அருந்தி வாகனம் ஒட்டிய வழக்கில் தவறை ஒப்புக்கொண்ட டேவிட் வார்னர், சாதாரண குடிமகனுக்கு கிடைக்க கூடிய தண்டனையை ஏற்க தயாராக உள்ளதாக கூறப்படுகிறது.

அவுஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் டேவிட் வார்னர், சமீபத்தில் பாகிஸ்தானில் நடைபெற்ற PSL தொடரில், கராச்சி கிங்ஸ் அணியின் அணித்தலைவராக விளையாடினார்.

போட்டிகளுக்கு இடையே ஒரு வாரத்திற்கு சிட்னி சென்ற அவர், கடந்த ஏப்ரல் 5 ஆம் திகதி அங்கு மதுபோதையில் வாகனம் ஒட்டியதாக காவல்துறை அவர் மீது வழக்குப்பதிவு செய்தது.

பரிசோதனையில் அனுமதிக்கப்பட்ட அளவை விட 2 மடங்கு அதிகமாக மது அருந்தி வாகனம் ஓட்டியது தெரிய வந்தது.

இந்த வழக்கு நேற்று வேவர்லி உள்ளூர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், வார்னருக்கு பதிலாக அவரது வழக்கறிஞர் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

சமூக ஒன்று கூடலில் நண்பரின் வீட்டில் 3 கிளாஸ் ஒயின் அருந்திய பிறகே அவர் வாகனம் ஒட்டிய முடிவு தவறானது, அவர் உபர் போன்ற வாகன சேவைகளைப் பயன்படுத்தியிருக்கலாம், தன் மீதான குற்றச்சாட்டுக்கு வார்னர் பொறுப்பேற்றுள்ளார் என அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

அடுத்த நீதிமன்ற விசாரணை வரும் ஜூன் 24 ஆம் திகதி நடைபெற உள்ளது.

மேலும், வார்னர் எந்த சலுகையும் எதிர்பாராமல் சாதாரண குடிமகனுக்கு என்ன தண்டனை கிடைக்குமோ அதை ஏற்க தயாராக உள்ளதாக கூறப்படுகிறது.

"கிரிக்கெட் NSWஇல், நாங்கள் பாதுகாப்பான வாகனம் ஓட்டுவதையே வலுவாக ஆதரிக்கிறோம், குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதை அல்ல.

இந்தக் குற்றச்சாட்டுகள் நிச்சயமாகக் கவலையளிப்பவையாக உள்ளன, நாங்கள் அவற்றை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறோம்" என கிரிக்கெட் நியூ சவுத் வேல்ஸ் தலைமை நிர்வாகி லீ ஜெர்மன் கூறியுள்ளார்.

BBL தொடரில் சிட்னி தண்டர்ஸ் அணியின் அணித்தலைவராக டேவிட் வார்னர் உள்ள நிலையில் அவரின் கேப்டன் பதவி பறிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.