Paristamil Navigation Paristamil advert login

பயன்படுத்தாத விடுமுறைகள் நாட்கள் (Congés payés ) ரத்தாகுமா? – தனியார் ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு!!

பயன்படுத்தாத விடுமுறைகள் நாட்கள் (Congés payés ) ரத்தாகுமா? – தனியார் ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு!!

9 வைகாசி 2026 சனி 07:30 | பார்வைகள் : 489


பெரும்பாலான தனியார் நிறுவனங்களில், 2024 ஜூன் 1 முதல் 2025 மே 31 வரை ஊழியர்கள் பெற்றுக்கொண்ட ஊதியத்துடன் கூடிய விடுமுறை நாட்களை, 2026 மே 31க்குள் பயன்படுத்த வேண்டும் என்ற விதி நடைமுறையில் உள்ளது. குறிப்பிட்ட காலத்திற்குள் விடுமுறைகளை பயன்படுத்தாத ஊழியர்கள், அவை முழுமையாக இழக்கப்படுமா என்ற கேள்வி தற்போது அதிகமாக எழுந்துள்ளது.

பொதுவாக தொழிலாளர் சட்டப்படி, குறிப்பிட்ட காலத்திற்குள் பயன்படுத்தப்படாத விடுமுறை நாட்கள் செல்லுபடியாகாது. எனினும், சில விதிவிலக்குகள் உள்ளன. நிறுவன ஒப்பந்தம் அல்லது துறை சார்ந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், விடுமுறை கணக்கீட்டு காலம் மாறுபடலாம். குறிப்பாக கட்டுமானத் துறை மற்றும் கலை நிகழ்ச்சி துறைகளில், ஆண்டு கணக்கீடு வேறு தேதிகளில் செயல்படுத்துவது குறிப்பிடத்தக்கது.

ஊழியர் முன்கூட்டியே கோரிக்கை விடுத்து, அதற்கு நிறுவன நிர்வாகம் ஒப்புதல் வழங்கினால், பயன்படுத்தப்படாத விடுமுறை நாட்களை அடுத்த காலத்திற்கு மாற்றிக் கொள்ளும் வாய்ப்பும் உள்ளது. சில நிறுவனங்களில், இந்த விடுமுறைகள் “Compte Épargne-Temps (CET)” எனப்படும் சேமிப்பு நேரக் கணக்கில் சேர்க்கப்பட்டு, பின்னர் பணமாகவோ அல்லது ஓய்வு நாள்களாகவோ பயன்படுத்த அனுமதிக்கப்படுகின்றன.

அதேவேளை, நோய்வாய்ப்பட்டு விடுப்பு, மகப்பேறு விடுப்பு, தத்தெடுப்பு விடுப்பு அல்லது நிறுவன தேவைக்காக விடுமுறை பெற முடியாத சூழ்நிலை போன்ற “வெளிப்புற காரணங்களால்” ஊழியர் விடுமுறையை பயன்படுத்த முடியாதிருந்தால், அவர்களுக்கு சட்டரீதியான மாற்று உரிமை உண்டு என்று அரசு தரப்பு விளக்கியுள்ளது. இத்தகைய சூழ்நிலைகளில், நிறுவனங்கள் ஊழியரின் விடுமுறை மாற்று கோரிக்கையை கட்டாயமாக ஏற்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.