Paristamil Navigation Paristamil advert login

விஜய்யை தடுத்து நிறுத்த ஒரே இரவில் ஒன்றான திராவிட கட்சிகள்; மாணிக்கம் தாகூர் விமர்சனம்

விஜய்யை தடுத்து நிறுத்த ஒரே இரவில் ஒன்றான திராவிட கட்சிகள்; மாணிக்கம் தாகூர் விமர்சனம்

8 வைகாசி 2026 வெள்ளி 10:48 | பார்வைகள் : 164


தமிழக சட்டமன்ற தேர்தல் களத்தை முதன்முறையாக சந்தித்த விஜய் தலைமையிலான த.வெ.க. 108 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து வரலாற்றில் இடம்பிடித்து உள்ளது. இந்த வெற்றி உற்சாகத்தில் விஜய், கவர்னர் அர்லேகரை சந்தித்து த.வெ.க.வை ஆட்சி அமைக்க அழைக்குமாறு உரிமை கோரினார்.ஆனால் கவர்னர் அர்லேகர், ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை என்பதால், 118 எம்.எல். ஏ.க்கள் பெயர் பட்டியலை வழங்கினால்தான் ஆட்சி அமைக்க அனுமதிக்க முடியும் என்று திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார்.

இதையடுத்து, தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளிடம் ஆதரவு கேட்டு விஜய் கடிதம் எழுதினார். மேலும் த.வெ.க. நிர்வாகிகளை நேரில் அனுப்பியும் வேண்டுகோள் விடுத்தார்..அவரது கோரிக்கையை ஏற்று 5 எம்.எல்.ஏ.க்கள் வைத்திருக்கும் காங்கிரஸ் கட்சி மட்டும் தி.மு.க.வுக்கு 'கல்தா' கொடுத்து விட்டு த.வெ.க.வுக்கு கைகொடுத்தது. மற்ற கட்சிகள் நிர்வாகிகளுடன் ஆலோசித்து முடிவை அறிவிப்பதாக தெரிவித்துள்ளன.

இதற்கிடையில், அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, எதிரியும் இல்லை' என்ற அரசியல் கூற்றுக்கு ஏற்ப இதுவரையில் அரசியல் -தேர்தல் களத்தில் எலியும், பூனையும் போன்று எதிரெதிர் துரு வங்களாக நின்ற தி.மு.க.வும். அ.தி.மு.க.வும் இணைந்து ஆட்சி அமைப்பதற்காக முயற்சிகள் திரைமறையில் நடப்பதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு இருகட்சிகளும் மறுப்பு தெரிவிக்காமல் உள்ளன..இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-இரண்டு திராவிட கட்சிகள்.

வாழ்நாள் எதிரிகள் ஒரே இரவில் ஒன்றானார்கள்; தமிழகத்திற்காக இல்லை. மதச்சார்பின்மைக்காக இல்லை. விஜய் என்கிற ஒரே ஒரு மனிதனை நிறுத்த காங்கிரஸ் தெளிவாக பார்த்தது வெளியேறியது. ஆர்.எஸ்.எஸ்., பாஜகவின் பி-டீமுடன் படுத்துக்கொண்டு உங்களை மதச்சார்பற்றவர் என்று சொல்ல முடியாது.“நிலையான அரசு” என்பது இரண்டு பயந்த கட்சிகள் தங்கள் அதிகாரத்தை காக்கும் அரசியல் மொழி. காங்கிரஸ் சரியாகவே வெளியேறியது. திமுக இன்று தன் முகமூடியை கழற்றுமா?. துரோகி யார்?. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.