Paristamil Navigation Paristamil advert login

மத்திய கிழக்கு பதற்றம்: ஹோர்முஸ் நீரிணை அருகே நிலைநிறுத்தப்படும் Charles de Gaulle விமானம் தாங்கிக் கப்பல்!!

மத்திய கிழக்கு பதற்றம்: ஹோர்முஸ் நீரிணை அருகே நிலைநிறுத்தப்படும் Charles de Gaulle விமானம் தாங்கிக் கப்பல்!!

8 வைகாசி 2026 வெள்ளி 07:23 | பார்வைகள் : 240


மத்திய கிழக்கில் நீடித்து வரும் பதற்றநிலைக்கிடையில், Charles de Gaulle விமானம் தாங்கிக் கப்பல் கிழக்கு மத்தியதரைக் கடலிலிருந்து செங்கடலின் தெற்கு பகுதிக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. ஹோர்முஸ் நீரிணையை அண்மித்த பகுதியில் பாதுகாப்பு நோக்கில் நிலைநிறுத்தப்படும் இந்தக் கப்பல், தேவையான தருணத்தில் “நடுநிலையான” பன்னாட்டு நடவடிக்கையில் ஈடுபடத் தயாராக இருப்பதாக பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் தலைமையிலான 40க்கும் மேற்பட்ட நாடுகள் இணைந்த கடற்படை கூட்டணி, ஹோர்முஸ் நீரிணையில் மீண்டும் பாதுகாப்பான கடல் போக்குவரத்தை உறுதிப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையிலான மோதலுக்கு பின்னர் இந்த முக்கிய கடற்பாதையில் ஏற்பட்ட தடைகள் உலக பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கப்பல்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதோடு, கப்பல் உரிமையாளர்கள் மற்றும் காப்புறுதி நிறுவனங்களின் நம்பிக்கையை மீட்டெடுப்பதும் இக்கூட்டணியின் முக்கிய நோக்கமாகும்.

சுமார் 20 ரஃபேல் போர் விமானங்களையும் பல பாதுகாப்பு கப்பல்களையும் ஏந்தியுள்ள Charles de Gaulle, முன்பு கிழக்கு மத்தியதரைக் கடலில் பிரான்ஸ் மற்றும் அதன் கூட்டணி நாடுகளின் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தது.

இருப்பினும், ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு நடவடிக்கை முழுமையாக நடைமுறைக்கு வருவது, மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் முடிவுக்கு வந்த பின்னரே சாத்தியமாகும் என பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளது. “நாங்கள் போரில் ஈடுபட்ட தரப்பல்ல; ஹோர்முஸ் நீரிணை பிரச்சினையை தனித்துவமாக கையாள விரும்புகிறோம்” என பிரெஞ்சு பாதுகாப்புத் துறை துணை அமைச்சர் Alice Rufo வலியுறுத்தியுள்ளார்.