Paristamil Navigation Paristamil advert login

தி.மு.க.-அ.தி.மு.க. சேர்ந்து ஆட்சி அமைக்க உரிமை கோரினாலும் சாத்தியம்தான் - கவர்னர் அர்லேகர்

தி.மு.க.-அ.தி.மு.க. சேர்ந்து ஆட்சி அமைக்க உரிமை கோரினாலும் சாத்தியம்தான் - கவர்னர் அர்லேகர்

8 வைகாசி 2026 வெள்ளி 05:14 | பார்வைகள் : 250


தமிழக சட்டசபை தேர்தலில் விஜய்யின் த.வெ.க. 108 இடங்களை கைப்பற்றியது. த.வெ.க.வுக்கு காங்கிரஸ் கட்சியின் 5 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு கொடுத்திருந்தாலும், ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை என்ற நிலையில், மற்ற கட்சிகள் த.வெ.க.வுக்கு இன்னும் ஆதரவு கொடுக்கவில்லை.

முன்னதாக, த.வெ.க. தலைவர் விஜய், நேற்று மாலை தமிழக பொறுப்பு கவர்னர் அர்லேகரை சந்தித்தார். அப்போது தங்களை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி கவர்னரிடம் கடிதம் வழங்கினார். ஆனால், பெரும்பான்மைக்கு தேவையான 118 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் விஜய்க்கு இல்லாததால், அவரை ஆட்சியமைக்க வரும்படி கவர்னர் அழைக்கவில்லை.

இந்த நிலையில், தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கேரள கவர்னரும், தமிழக பொறுப்பு கவர்னருமான அர்லேகர் கூறியிருப்பதாவது;-“பெரும்பான்மை இல்லாதது விஜய்க்கு மட்டும் பிரச்சினை இல்லை, ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் பிரச்சினை. மைனாரிட்டி அரசு ஆட்சி அமைத்து குதிரை பேரம் நடத்துவதை அனுமதிக்க முடியாது. 118 இடங்கள் இல்லாமல் ஆட்சி அமைக்க அழைக்க முடியாது.

118 எம்.எல்.ஏ.க்களை கண்முன் நிறுத்துங்கள் என்று நான் கூறவில்லை. விஜய் மெஜாரிட்டி எண்ணுடன் வந்தால் ஆட்சி அமைக்க அழைக்க தயார்..ஆனால் விஜய்யிடம் எந்த பெரும்பான்மையும் இல்லை. விஜய் ஆட்சி அமைப்பதை நான் தடுப்பதாக எப்படி சொல்ல முடியும்? விஜய்யை ஆட்சி அமைக்க அழைப்பதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. அடுத்த 2 அல்லது 3 நாட்களில் முடிவு எட்டப்படாவிட்டால் அடுத்த கட்ட முடிவுகள் குறித்து ஆலோசிப்பேன்.

எஸ்.ஆர்.பொம்மை வழக்கின் உத்தரவு தற்போதைய சூழலுக்கு பொருந்தாது. தி.மு.க. - அ.தி.மு.க. சேர்ந்து ஆட்சி அமைக்க உரிமை கோரினாலும் சாத்தியம்தான்.”இவ்வாறு அவர் தெரிவித்தார்.