Paristamil Navigation Paristamil advert login

எதிர்க்கட்சி தலைவர் யார்? தி.மு.க., உயர்நிலை குழுவில் ஆலோசனை

எதிர்க்கட்சி தலைவர் யார்? தி.மு.க., உயர்நிலை குழுவில் ஆலோசனை

7 வைகாசி 2026 வியாழன் 10:33 | பார்வைகள் : 190


எதிர்க்கட்சி தலைவர் தேர்வு தொடர்பாக, தி.மு.க., இளைஞரணி செயலர் உதயநிதியுடன், நேற்று மாலை உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர்கள் ஆலோசனை நடத்தினர்.

சட்டசபை தேர்தலில், த.வெ.க., 108 இடங்களில் வென்று, அதிக இடங்களை பிடித்த கட்சியாக உருவெடுத்துள்ளது. தி.மு.க., 59 தொகுதிகளில் வெற்றி பெற்று, எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றுள்ளது.

சட்டசபை தி.மு.க., குழு தலைவரை தேர்வு செய்ய, இன்று மாலை அறிவாலயத்தில், ஸ்டாலின் தலைமையில் எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நடக்க உள்ளது.

சட்டசபை தி.மு.க., தலைவராக தேர்ந்தெடுக்கப்படுபவர், சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராவார். எனவே, அப்பதவி உதயநிதிக்கு வழங்கப்படலாம். அவர் மறுத்தால், கட்சியின் முதன்மை செயலரான கே.என்.நேரு, எதிர்க்கட்சித் தலைவராக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள குறிஞ்சி இல்லத்தில், உதயநிதி தலைமையில், தி.மு.க., உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.

கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தங்கம் தென்னரசு, செந்தில் பாலாஜி, அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி, செய்தி தொடர்பு செயலர் டி.கே.எஸ்.இளங்கோவன் மற்றும் திட்டக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் தி.மு.க., துணை பொதுச்செயலர் கனிமொழி பங்கேற்கவில்லை.

சட்டசபை கொறடாவாக, முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, பொருளாளராக ஐ.பெரியசாமி ஆகியோரை தேர்வு செய்வது குறித்தும், கட்சி தோல்வி மற்றும் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்தும், கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.