இது நம் தோல்வி அல்ல; மக்களின் தோல்விதான்; தொண்டர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் சீமான்
6 வைகாசி 2026 புதன் 10:50 | பார்வைகள் : 1582
இன்னும் பத்து ஆண்டுகள் போராடி நிச்சயம் வெற்றி பெறுவோம் என, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
சட்டசபை தேர்தலில், தனித்து போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி, 234 தொகுதிகளிலும் தோல்வியை தழுவி உள்ளது. சிவகங்கை மாவட்டம், காரைக்குடி தொகுதியில் போட்டியிட்ட சீமான், நான்காம் இடத்திற்கு தள்ளப்பட்டதோடு, டிபாசிட்டையும் இழந்து விட்டார்.
இந்நிலையில், அவர் வெளியிட்ட அறிக்கை:
இவ்வளவு போராடியவர்களுக்கு, இவ்வளவு மாற்று அரசியலை முன்வைத்தவர்களுக்கு, இன்னும் பத்து லட்சம் ஓட்டுகளை மக்கள் அளித்திருக்கலாம் என்ற வருத்தம் எனக்கு இருக்கிறது. சட்டசபைக்குள் செல்ல வேண்டும் என்ற விருப்பம் எனக்கு இல்லை. நாட்டை வெல்லாமல் இரண்டு மூன்று தொகுதிகளை வென்று, என்ன ஆகிவிடப் போகிறது.
ஆனாலும், போயிருக்கலாம்; தமிழ் சமூகத்தின் குரலாக சட்டசபையில் பேசியிருக்கலாம். அதற்கு நமக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இது நம் தோல்வி அல்ல; மக்களின் தோல்விதான். ஆனால், இந்த தேர்தலில், என் பிள்ளைகளின் உழைப்பு அசாத்தியமானது. நான் வென்று விடுவேன், இன்னும் ஐந்தாறு பேர் வெல்வோம் என கணித்திருந்தேன்; அது நடக்காமல் போய் விட்டது.
அதனால் என்ன, இன்று சட்டசபைக்குள் செல்லவில்லை என்றால், எதிர்காலத்தில் செல்வோம். இன்னும் 10 ஆண்டுகள் போராடி, உறுதியாக வெற்றி பெறுவோம்; அதில் எந்த மாற்றும் இல்லை. எக்காலத்திலும் தடம் பிறழ மாட்டோம். தன்னலத்திற்காக சமரசம் செய்து கொள்ள மாட்டோம். அவ்வாறு சமரசம் செய்து கொள்ளும் ஒரு வெற்றி தேவையில்லை.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan