Paristamil Navigation Paristamil advert login

நாங்கள் தோற்கவில்லை; ராஜினாமா செய்ய மறுத்து மம்தா அடம்

நாங்கள் தோற்கவில்லை; ராஜினாமா செய்ய மறுத்து மம்தா அடம்

6 வைகாசி 2026 புதன் 08:47 | பார்வைகள் : 118


நாங்கள் தோற்கவில்லை. ராஜினாமா செய்ய மாட்டேன்,'' என்று கூறி, மேற்கு வங்க முதல்வர் மம்தா அடம் பிடிப்பதால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.

நடந்து முடிந்த மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் திரிணமுல் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்தது; பாஜ கட்சி, பெரும்பான்மை இடங்களை வென்று ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளது.

தோல்வியுற்ற முதல்வர் தானாக முன் வந்து ராஜினாமா செய்வது மரபு. அடுத்த முதல்வர் பதவி ஏற்கும் வரை தோல்வி அடைந்தவர், காபந்து முதல்வராக நீடிப்பது வழக்கம்.

ஆனால், அந்த மரபுப்படி தன் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய மம்தா மறுத்து விட்டார். 'நாங்கள் தோற்கவில்லை. ராஜினாமா செய்ய முடியாது' என்று அவர் கூறி விட்டார்.

இதனால் அடுத்த கட்டமான என்ன செய்வது என்று, மத்திய அரசு மற்றும் கவர்னர் மாளிகை தரப்பில் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

செய்தியாளர்களிடம் மம்தா கூறியதாவது:

நான் தோற்கவில்லை. நான் ராஜ் பவனுக்கு செல்ல மாட்டேன். இது எங்களை தோற்கடிக்க அவர்கள் செய்த முயற்சி. தேர்தல் கமிஷன் மூலமாக அதிகாரபூர்வமாக அவர்கள் எங்களை தோற்கடிக்கலாம். ஆனால், தார்மீக ரீதியாக நாங்கள் தான் வென்றோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தனக்கு ராகுல், அரவிந்த் கெஜ்ரிவால், உத்தவ் தாக்கரே, அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ், ஹேமந்த் சோரன் ஆகியோர் போன் செய்து ஆதரவு தெரிவித்ததாகவும், இண்டியா கூட்டணி தலைவர்கள் அனைவரும் நாளை முதல் கொல்கட்டா வர உள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.