Paristamil Navigation Paristamil advert login

அதிமுக.,வுக்கு ஏன் இந்த நிலை! சீனியர்களை சீண்டியதால் வந்த வினை!

அதிமுக.,வுக்கு ஏன் இந்த நிலை! சீனியர்களை சீண்டியதால் வந்த வினை!

5 வைகாசி 2026 செவ்வாய் 10:20 | பார்வைகள் : 435


தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக 3வது இடத்தையே பிடித்துள்ளது. கடந்த தேர்தலில் எதிர்க்கட்சியாக இருந்த அதிமுக, இம்முறை அதுவும் கிடைக்காமல் 3வது கட்சியாக கீழே இறங்கியுள்ளது.

2016ல் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு கிட்டத்தட்ட 4 ஆண்டுகள் ஆட்சி செய்தார் எடப்பாடி பழனிசாமி. ஆட்சியின் போது தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம், சாத்தாங்குளம் தந்தை, மகன் போலீஸ் கஸ்டடி இறப்பு உள்ளிட்ட காரணங்களை தவிர்த்து பெரியளவில் 'நெகட்டிவ்' பிம்பம் ஏற்படவில்லை.

இருந்தும் அடுத்து நடந்த 2021 சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணிக்கே மக்கள் வாய்ப்பளித்தனர். மக்களால் நேரடியாக தேர்ந்தெடுத்து முதல்வராகாத பழனிசாமியின் தலைமையை மக்கள் ஏற்கவில்லை என திமுக கூட்டணியினர் பரப்பினர். அதற்கேற்றார்போல், அதிமுக.,வை வசப்படுத்திய பழனிசாமி, தன் தலைமையில் சந்தித்த 10 தேர்தல்களில் தோல்வியை பெற்றார்.

இது ஒருபுறம் இருக்க, இம்முறை திமுக எதிர்ப்பு ஓட்டையும் பெற்று ஆட்சியமைப்பார் என எதிர்ப்பார்த்த நிலையில் அதிமுக 3ம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. அதற்கு பல காரணங்களை சொல்லலாம்.

அதிமுக.,வில் இருந்த மற்ற சீனியர்களை பழனிசாமி அரவணைத்து செல்லவில்லை. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு டிடிவி தினகரன், சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை கட்சியில் சேர்க்க மாட்டேன் என பிடிவாதமாக இருந்தார். இருந்தாலும் தேர்தலுக்கு முன்பு மனம் திருந்திய மைந்தனாக டிடிவி தினகரனை மட்டும் கூட்டணியில் சேர்த்துக்கொண்டார். ஆனால், மற்றவர்களை இவர் கண்டுகொள்ளவில்லை.

8 முறை எம்எல்ஏ.,வாக இருந்த செங்கோட்டையன், சீனியர்களை ஒருங்கிணைக்க போர்க்கொடி தூக்கினார். அதனால் அவரையும் நீக்கினார் பழனிசாமி. கொங்கு மண்டலத்தில் இதனால் அதிமுக.,விற்கு ஜாதி ஓட்டுகள் குறைந்தன. இதனால் தவெக.,வில் சேர்ந்த செங்கோட்டையன் வெற்றி பெற்றார். செங்கோட்டையனை தோற்கடிப்பதற்காக அந்த பகுதியில் கடுமையாக பிரசாரம் செய்தும் செங்கோட்டையன் வென்றுள்ளார்.

பொறுத்து பொறுத்து பார்த்த ஓபிஎஸ் திமுக.,விற்கு தாவியதுடன், வெற்றியும் பெற்றார். சசிகலா தனிக்கட்சி துவங்கி பாமக ராமதாஸ் உடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டார். சசிகலா, ராமதாஸ் உடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டதால், டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் இருந்த ஜாதி ஓட்டுகளையும் பிரித்தது. ராமதாஸ் பாமகவால் வட மாவட்டங்களில் இருந்த அதிமுக ஓட்டுகளையும் பிரித்தது.

திமுக ஆட்சியின் ஆரம்ப கட்டங்களில் பழனிசாமி கடுமையான திமுக எதிர்ப்பு அரசியல் நடத்தவில்லை. திமுக அரசின் ஊழல்களை கண்டும் காணாமல் இருந்துவிட்டு தேர்தல் நேரத்தில் தான் கடுமையாக விமர்சித்து பேசினார். இதையெல்லாம் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருந்தனர். கடைசி நேரத்தில் அவர் செய்த திமுக எதிர்ப்பு பிரசாரத்தை மக்கள் நம்பவில்லை. இவையும் சேர்ந்து அதிமுக.,வின் ஓட்டுகளை காவு வாங்கிவிட்டன.