Paristamil Navigation Paristamil advert login

பேட்மேன் முருகானந்தம் பெயர் நோபல் பரிசுக்கு பரிந்துரை!

பேட்மேன் முருகானந்தம் பெயர் நோபல் பரிசுக்கு பரிந்துரை!

4 வைகாசி 2026 திங்கள் 05:14 | பார்வைகள் : 194


பெண்களின் சுகாதாரத்திற்காக மலிவு விலை சானிட்டரி நாப்கின் இயந்திரத்தை கண்டறிந்த அருணாச்சலம் முருகானந்தம், இந்த ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கோவையை சேர்ந்த அருணாச்சலம் முருகானந்தம், எளிய பெண்களும் பயன்படுத்தும் வகையில் மலிவு விலையில் சானிட்டரி நாப்கின் தயாரிக்கும் இயந்திரத்தை உருவாக்கி, உலகையே திரும்பிப் பார்க்க வைத்தவர். இவரது வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடிப்பில், 'பேட்மேன்' திரைப்படம் வெளியானது. ஏற்கனவே மத்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்துள்ளது.

இந்நிலையில், இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பரிந்துரை பட்டியலில் இவரது பெயரும் இடம்பெற்றுள்ளது. இப்பரிசுக்கு 208 தனிநபர்கள், 79 அமைப்புகள் என மொத்தம் 287 பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இதில் ஒருவராக அருணாச்சலம் முருகானந்தம் தேர்வாகியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ''கடந்த 40 ஆண்டுகளாக இப்பணியில் என்னை ஈடுபடுத்தி கொண்டுள்ளேன்.

ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே உள்ளிட்ட, 40 நாடுகளுக்கு எங்களது மலிவு விலை தொழில்நுட்பத்தை கொண்டு சேர்த்துள்ளோம். டிரினிடாட் மற்றும் டொபாகோ போன்ற சிறிய தீவுகளிலும் எங்கள் தயாரிப்பு இயந்திரம் பயன்பாட்டில் உள்ளது. அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளிலேயே இது குறித்த சரியான விழிப்புணர்வு இல்லை. இந்தியாவில் லடாக் முதல் கன்னியாகுமரி வரை அனைத்து மாநிலங்களிலும் பயிற்சியும், விழிப்புணர்வும் வழங்கி வருகிறோம்.

800 கோடி மக்கள் வாழும் இந்த உலகில், நோபல் பரிசுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ள 208 தனி நபர்களில் நானும் ஒருவன் என்பதே பெருமையான விஷயம். இந்திய அரசின் உயரிய விருதைத் தொடர்ந்து, இந்த உலகளாவிய அங்கீகாரம் கிடைத்துள்ளதை சாதனையாகக் கருதுகிறேன்,'' என்றார்.