Paristamil Navigation Paristamil advert login

கடலுக்கு அடியில் 2,400 சதுர மீட்டரில் பிரமாண்ட தேசியக்கொடி!

கடலுக்கு அடியில் 2,400 சதுர மீட்டரில் பிரமாண்ட தேசியக்கொடி!

3 வைகாசி 2026 ஞாயிறு 07:14 | பார்வைகள் : 679


அந்தமானில் கடலுக்கு அடியில் சுமார் 2,400  சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட பிரமாண்ட தேசியக்கொடியை விரித்து கின்னஸ் உலக சாதனை படைக்கப்பட்டுள்ளது.

அந்தமான் மற்றும் நிகோபாரின் முக்கிய சுற்றுலாத் தலமான ஸ்வராஜ் தீவில் வனத்துறை, கடலோரக் காவல் படை மற்றும் தனியார் டைவிங் குழுவினர் என சுமார் 200க்கும் மேற்பட்டோர் இணைந்து இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.

வங்காள விரிகுடாவின் முக்கிய சுற்றுலாத் தலமான ஸ்வராஜ் தீவில் (ஹேவ்லாக் தீவு), நீருக்கடியில் மிகப்பெரிய இந்திய தேசியக் கொடியை வெற்றிகரமாக விரித்து அந்தமான் நிக்கோபார் தீவுகள் கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளன. அந்தமான் நிக்கோபார் தீவுகளின் துணைநிலை கவர்னர் தேவேந்திர குமார் ஜோஷி, இந்த கின்னஸ் சாதனைக்கான சான்றிதழை பெற்றுக் கொண்டார்.

கடலுக்கு அடியில் சுமார் 2,400 சதுர அடி பரப்பளவு கொண்ட பிரமாண்ட தேசியக்கொடியை விரித்து கின்னஸ் சாதனை படைத்தது குறித்து அதிகாரிகள் கூறுகையில், 'இந்த தீவுகளை உலகத்தரம் வாய்ந்த ஸ்கூபா டைவிங் மற்றும் கடல்சார் சுற்றுலா மையமாக மேம்படுத்துவதே இந்த முயற்சியின் நோக்கமாகும். மேலும், இப்பகுதியின் தனித்துவமான கடல் சார் உயிரியல் பன்முகத்தன்மை மற்றும் பாதுகாப்பு முயற்சிகளை உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்ட இது உதவும்,' என்றனர்.

இதன் தொடர்ச்சியாக, நாளை (மே 3) ஸ்வராஜ் தீவில் உள்ள லைட் ஹவுஸ் அருகே மற்றொரு கின்னஸ் சாதனை முயற்சியை நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. அதாவது, கடல் நீருக்கடியில் குறைந்தபட்சம் 10 மீட்டர் உயரத்தில் மிக உயரமான மனித அடுக்கு உருவாக்கி சாதனை படைக்க இருப்பதாக அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகள் நிர்வாகம் தெரிவித்துள்ளது.