'கர' தனுஷை காப்பாற்றியதா? கை விட்டதா?
30 சித்திரை 2026 வியாழன் 16:50 | பார்வைகள் : 270
ஓட்டை பிரிப்பது, பூட்டை உடைப்பது என சாதாரண திருடனாக இருக்கும் தனுஷ், தந்தையை தங்கள் நிலத்தில் புதைக்க தொடர் பேங்க் கொள்ளையில் ஈடுபடுகிறார். அவரை போலீஸ் டிஎஸ்பி சுராஜ் வெஞ்சரமுடு பிடித்தாரா? என்பதை அப்பா பாசம், விவசாயிகள் பிரச்னை, பேங்க் கடன், ஜப்தி, திருடன், போலீஸ் விளையாட்டு கலந்து கர படமாக கொடுத்து இருக்கிறார் இயக்குனர் விக்னேஷ் ராஜா. இவர் போர்த் தொழில் படத்தை இயக்கியவர்.
1990களில் ராமநாதபுரம் மாவட்டத்தில் கதை நடக்கிறது. அந்த சமயத்தில் மழை பொய்த்து போனதால் பேங்குகளில் வாங்கிய கடனை, டிராக்டர் வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாமல் கஷ்டப்படுகிறார்கள் விவசாயிகள். அப்படி தவிக்கும் விவசாயியாக, இதுவரை பார்த்திராத கெட் அப்பில், இதுவரை நடித்திராத உடல் மொழியில் தனுஷ் அப்பாவாக நடித்துள்ள இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் வாழ்ந்திருக்கிறார். அவருக்கும், மகன் தனுசுக்குமான பாச சீன்கள் டச்சிங். கடனால் தவிக்கும் ஏழை விவசாயிகளின் குரலாக அவர் வருகிறார். சில சீன்களில் வந்தாலும் அவர் மனைவியாக வரும் ஸ்ரீஜாரவி நடிப்பும் யதார்த்தம். திடீரென கே.எஸ்.ரவிக்குமார் இறந்துபோக, பேங்கில் வாங்கிய கடன் காரணமாக தங்கள் நிலத்தில் அவரை புதைக்க முடியாமல் தவிக்கும் தனுஷ், கடனை அடைக்க, கடன் கொடுத்த பேங்க் கிளைகளையே கொள்ளை அடிக்க முயற்சிக்க, கதை இன்னும் சூடுபிடிக்கிறது
ஆரம்பகாட்சி முதல் கடைசி வரை தனது கேரக்டர் தன்மை உணர்ந்து அதற்கேற்ப நடித்து இருக்கிறார் தனுஷ். திருடுகிற சீன், போலீசில் அடிவாங்குற சீன், பேங்கில், ஆஸ்பத்திரியில் தவிக்கிற சீன், பக்காவாக திட்டம் போட்டு பேங்கை கொள்ளையடிக்கிற சீனில் மிரட்டியிருக்கிறார். ஆனாலும், மிக இயல்பாக வருவதால், பல இடங்களில் ஹீரோயிசம் மிஸ்சிங். ஒன்றிரண்டு சீன்களில் மட்டுமே அவருடைய ரசிகர்கள் கைதட்டுகிற, விசில் அடிக்கிற இடங்கள் இருக்கிறது. ஒரு மாஸ் ஹீரோவை, தேசிய விருது வாங்கிய நடிகரை இப்படியா பயன்படுத்துவீங்க டைரக்டர் சார்?
அட, மமிதா பைஜூவா இது என்று கிராமத்து பெண்ணாக ஆச்சரியப்படுத்துகிறார் மமிதா. ஒன்றிரண்டு எமோஷனல் சீன்களில் கவர்கிறார். ஆனால், அவரை இயக்குனர் வீணாக்கிவிட்டார் என்றே சொல்லலாம். இடைவேளைக்குபின் காணாமல் போகிறார்.
தனுஷை பிடிக்க தவிக்கும் போலீஸ் டிஎஸ்பியாக வரும் சுராஜ் வெஞ்சரமுடு நடிப்பும், அவர் வசனங்களும் படத்துக்கு பலம். கொஞ்சம் காமெடி கலந்த அவர் உடல்மொழி ரசிக்க வைக்கிறது. கொஞ்சம் பப்ளிசிட்டி பைத்தியமாகவும் வருகிறார். பேங்க் மானேஜர் ஆக வரும் ஜெயராம் ரொம்ப அலட்டாமல் வில்லத்தனம் செய்கிறார். அவருக்கு கிளைமாக்சில் ஒரு சம்பவம் நடக்க, தியேட்டரே கை தட்டுகிறது. அப்படியொரு நடிப்பு. தனுஷ் உறவினாக வரும் கருணாஸ், வயதான விவசாயியாக வரும் எம்.எஸ்.பாஸ்கரும் மனதில் நிற்கிறார்கள். தனுஷ் நண்பனாக, திருடனாக வரும் பிருத்வியும் சில இடங்களில் கவர்கிறார்.
பேங்க் கொள்ளைதான் படத்தின் பிரதான விஷயம். அதை ரொம்பவே விரிவாக காண்பித்து இருக்கிறார் இயக்குனர். அதிலும் கொள்ளையடிக்க தனுஷ் போடும் திட்டம், பேங்கில் நடிக்கிற விஷயங்கள், அதை தடுக்க போலீஸ் டிஎஸ்பி சுராஜ் எடுக்கும் நடவடிக்கைகள் கர படத்தின் பிளஸ். ஆனாலும் சில சீன்கள் தவிர, மற்ற இடங்களில் கொள்ளைக்கான விறுவிறுப்பு, பரபரப்பு மிஸ்சிங். அதிலும் கிளைமாக்ஸ் நிறையவே சினிமாத்தனம். அதை அழுத்தமாக சொல்ல விட்டு இருக்கிறார் இயக்குனர். பேங்க் கொள்ளை பின்னணியில் உலக அளவில் ஏகப்பட்ட படங்கள் வந்துள்ளன. இது விவசாயிகள் நலனில் எடுக்கப்பட்ட நல்ல கதையாக இருந்தாலும் இந்த ஜானருக்கே உரிய ஸ்பீடு மிஸ்சிங்.
விவசாயிகள், கடன், அப்பா பாசம், கொள்ளை என பல முக்கியமான விஷயங்கள் இருந்தாலும் படம் மெதுவாக நகர்கிறது. ஒரு கமர்ஷியல் படத்துக்கான திரைக்கதை, தனுஷ் மாதிரியான நடிகர்களுக்கு உரிய சீன்கள் படத்தின் மிஸ்சிங். ஜி.வி.பிரகாசின் கண்ணம்மா பாடல் மனதில் நிற்கிறது. பின்னணி இசை ஓகே.
விவசாயிகள் கடன் வாங்குகிறார்கள் கஷ்டப்படுகிறார்கள் என்று சொல்லும் இயக்குனர், அது தனியார் பேங்கா? அரசுடமை ஆக்கப்பட்ட பேங்கா என்பதை கூட சரியாக சொல்லவில்லை. படத்தின் நீளமும் அதிகம். முதற்பாதியில் பல காட்சிகளை குறைத்து இருக்கலாம். இயக்குனரின் முந்தைய படமான போர்த் தொழிலில் விறுவிறு திரைக்கதை, திருப்பங்கள், பல கேரக்டர்கள் சுவாரஸ்யமாக இருக்கும். அதையெல்லாம் கர படத்தில் இல்லை. போர்த் தொழில் இயக்குனரின் 'தொழில்' சரியில்லாததால் இந்த படம் பல இடங்களில் போர் அடிக்கிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan