ரஷ்யாவில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் மீது ட்ரோன் தாக்குதல்
29 சித்திரை 2026 புதன் 09:01 | பார்வைகள் : 118
ரஷ்யாவின் கருங்கடல் கடற்கரையின் துவாப்சே நகரில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் மீது உக்ரைன் அண்மையில் தொடர்ச்சியாக நடத்திய ட்ரோன் தாக்குதல்களால் சுத்திகரிப்பு நிலையம் தீப்பற்றி எரிந்து, கரும்புகையை வெளியேற்றியதோடு, பாரிய எண்ணெய்க் கசிவும் ஏற்பட்டுள்ளது.
ரஷ்யா மீது உக்ரைன் மூன்றாவது முறையாக நடத்திய ட்ரோன் தாக்குதலால் தீ பரவி, சேதமடைந்துள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து கசிந்த எண்ணெயால் பாரியதொரு சுற்றுச்சூழல் மாசு ஏற்பட்டுள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
தற்போது எண்ணெய்க் கசிவு கட்டுப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறபோதும் எண்ணெய்க் கலப்பினால் தூய்மையின்றிக் கிடக்கும் சுற்றுப்புறத்தை தூய்மைப்படுத்துவதற்கான பணிகள் போதுமானதாக இல்லை என ரஷ்யாவின் அவசரநிலை சூழ்நிலைகள் அமைச்சர் அலெக்சாண்டர் குரென்கோவ் தெரிவித்துள்ளார்.
அத்துடன் அவர், நிலைமை தற்போது கட்டுப்பாட்டில் உள்ளது. சுத்திகரிப்பு நிலையத்தை சுற்றியுள்ள பாதுகாப்பு அணைகளை மேலும் பலப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
மேலும், சுத்திகரிப்பு நிலையத்தில் கசிந்த எண்ணெய் உள்ளிட்ட எரிபொருட்கள் கருங்கடலில் கலப்பதை தடுப்பதற்காக மேலதிகமாக, “பூம் பெரியர்ஸ்” (boom barriers) என்கிற தடுப்புக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
துவாப்சே ஆற்றில் முன்னதாக இதுபோன்ற தடுப்புக்கள் ஒன்பது வரிசைகளில் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்ட பின்னர், நூற்றுக்கணக்கான மீட்புப் பணியாளர்களும் பல்வேறு இயந்திரங்களும் களப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை தெரியவருகிறது.
இந்தத் தாக்குதலால் ஏற்பட்ட மோசமான விபத்துக்களால் பொதுமக்களுக்கு எந்த ஆபத்தும் நேரவில்லை. எனினும், பாதுகாப்பு கருதி அப்பகுதியில் வசிக்கும் மக்கள் தற்காலிகமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
30க்கும் மேற்பட்ட வீதிகளில் குடிநீர் விநியோகம் தடைப்பட்டுள்ளது.
சுத்திகரிப்பு நிலையம் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து அப்பகுதியில் ஏற்படக்கூடிய சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து பல தரப்பினர் கவலையும் அச்சமும் தெரிவித்து வருகின்றனர்.



திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

Ajouter
Annuaire
Scan