Paristamil Navigation Paristamil advert login

உலகின் முக்கிய எண்ணெய் போக்குவரத்து பாதையான ஹார்முஸ் ஜலசந்தி மூடல்

உலகின் முக்கிய எண்ணெய் போக்குவரத்து பாதையான ஹார்முஸ் ஜலசந்தி  மூடல்

17 பங்குனி 2026 செவ்வாய் 05:31 | பார்வைகள் : 300


மேற்காசிய நாடான ஈரான் மீது, அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து நடத்திய போரால், உலகின் முக்கிய எண்ணெய் போக்குவரத்து பாதையான ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டது.

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், 'சீனா, பிரான்ஸ், ஜப்பான், தென் கொரியா, பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகள் ஹார்முஸ் ஜலசந்தியை திறந்து பாதுகாப்பாக வைத்திருக்க போர்க்கப்பல்களை அனுப்ப வேண்டும் என கூறியிருந்தார்.

ஐரோப்பிய நாடான பிரிட்டனின் பிரதமர் கீர் ஸ்டாமருடன் 15.03.2026 டிரம்ப் தொலைபேசியில் பேசியபோது, ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க போர்க் கப்பல்களை அனுப்புமாறு வலியுறுத்தினார்.

ஆனால், ஸ்டாமர் அதற்கு தயாராக இல்லை என திட்டவட்டமாக மறுத்துவிட்டதாக தெரிகிறது.

ஈரானுக்கு எதிரான தொடக்க தாக்குதல்களுக்கு பிரிட்டன் தளங்களை அமெரிக்கா பயன்படுத்த அனுமதிக்காததால் ட்ரம்ப் அதிருப்தியில் உள்ள நிலையில், இந்த மறுப்பு புதிய மோதலை துாண்டியுள்ளது.

வட அமெரிக்க நாடான கனடாவின் பிரதமர் மார்க் கார்னி, “ஈரானின் அணு ஆயுத திட்டம் மற்றும் பயங்கரவாத செயல்களை தடுப்பது அவசியம் என்பதை கனடா ஆதரிக்கிறது.

ஆனால், ஒரு நாட்டுக்கு எதிரான தாக்குதல் ராணுவ நடவடிக்கைகளில் நாங்கள் இணைய மாட்டோம் என கூறியுள்ளார்.

போர்க்கப்பல்களை அனுப்பும் திட்டம் இல்லை என ஆஸ்திரேலியாவும் கூறியுள்ளது. ஜப்பானும், உள்நாட்டு சட்டங்களுக்கு உட்பட்டு அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை ஆராய்ந்து வருவதாக தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தங்களுக்கு, 'நேட்டோ' எனப்படும் ராணுவ ஒத்துழைப்பு அமைப்பு நாடுகள் உதவாவிட்டால், அந்த அமைப்புக்கு மோசமான எதிர்காலம் இருக்கும் என டிரம்ப் எச்சரித்துள்ளார்.