Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் அரச ஊழியர்கள் வீட்டில் இருந்து வேலை செய்வது தொடர்பில் முக்கிய கலந்துரையாடல்

இலங்கையில் அரச ஊழியர்கள் வீட்டில் இருந்து வேலை செய்வது தொடர்பில் முக்கிய கலந்துரையாடல்

15 பங்குனி 2026 ஞாயிறு 14:50 | பார்வைகள் : 200


மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் உருவாகியுள்ள நிலைமையை முன்கூட்டியே கணிக்க முடியாது எனவும், வளர்ந்து வரும் புதிய சவால்களைத் தொடர்ந்து கண்காணித்து ஒரு நாடாக அவற்றுக்குக் கூட்டு முயற்சியுடன் முகம் கொடுக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

தற்போதைய சூழ்நிலையில் அத்தியாவசிய சேவைகளை முறையாகப் பேணுவதில் எழுந்துள்ள சவால்கள் குறித்து சம்பந்தப்பட்ட அமைச்சுகளின் செயலாளர்கள் மற்றும் நிறுவனத் தலைவர்களுடன் இன்று (15) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.

இந்தக் கலந்துரையாடலின் போது எரிபொருளைச் சிக்கனமாகப் பயன்படுத்துவதை உறுதிப்படுத்தும் நோக்கில், அரச ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.

சுகாதார சேவைகளைத் தடையின்றி முன்னெடுப்பதில் விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், அதற்காக அத்தியாவசிய எரிபொருள் கையிருப்புகளைப் பிரதேச ரீதியாகப் பேணுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தற்போதைய நெருக்கடிக்கு மத்தியில் கல்வி உள்ளிட்ட ஏனைய துறைகளை எவ்வாறு தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வது என்பது குறித்தும் இங்கு ஆலோசிக்கப்பட்டது.

விவசாயம், மீன்பிடி மற்றும் கைத்தொழில் துறைகளுக்கான எரிபொருள் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக டிஜிட்டல் குறியீட்டு (QR) முறையை விரைவாக முறைப்படுத்துவதன் அவசியத்தை ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.