Paristamil Navigation Paristamil advert login

நெதன்யாகுவுக்கு பகிரங்கமாகக் கொலை மிரட்டல் விடுத்த ஈரான்

நெதன்யாகுவுக்கு பகிரங்கமாகக் கொலை மிரட்டல் விடுத்த ஈரான்

15 பங்குனி 2026 ஞாயிறு 14:29 | பார்வைகள் : 230


இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் பரவும் நிலையில், அவர் உயிருடன் இருந்தால் துரத்திக் கொல்வோம் என ஈரான் மிரட்டல் விடுத்துள்ளது.

ஈரான் மீதான இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் போர் 16வது நாளாக நீடிக்கும் நிலையில், மத்திய கிழக்கு தொடங்கி உலகின் பல நாடுகளில் அதன் தாக்கம் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது.

ஈரானின் IRGC படைகள் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிறார்களைக் கொன்ற அந்த குற்றவாளி இன்னும் உயிருடன் இருந்தால், முழு பலத்துடன் அவரை நாங்கள் தொடர்ந்து வேட்டையாடிக் கொல்வோம் என மிரட்டல் விடுத்துள்ளனர்.

சமூக ஊடகங்களில் ஏற்கனவே நெதன்யாகு கொல்லப்பட்டு விட்டார் என்றே வதந்திகள் பரவி வருகிறது. அதற்கு பல காரணங்களும் இணையவாசிகளால் பட்டியலிடப்படுகிறது.

மார்ச் 12ஆம் திகதி இஸ்ரேல் பிரதமரலுவலகம் வெளியிட்டுள்ள நெதன்யாகு பேசும் காணொளியானது செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டது என்றும் வாதிடுகின்றனர்.

பெப்ரவரி 28 ஆம் திகதி போர் தொடங்கியதன் பின்னர் முதல் முறையாக நெதன்யாகுவிடம் இருந்து மார்ச் 12 ஆம் திகதி ஒரு கணொளி வெளியானது.

ஆனால், ஈரானில் உயர்மட்டத் தலைவர்கள் அனைவரும் பொதுமக்களுடன் பேரணிகளில் கலந்துக் கொள்வதுடன், சமூக ஊடகங்களில் கருத்துக்களைப் பரிமாறி வருகின்றனர்.

உலகத் தலைவர்களுடன் தொலைபேசியில் உரையாடுகின்றனர். நெதன்யாகுவிடம் இருந்து மட்டும் அவ்வாறான ஒரு தகவலும் இல்லை. மட்டுமின்றி, ஒருமுறை கூட நெதன்யாகுவிடம் போர் தொடர்பில் விவாதித்ததாக டொனால்ட் ட்ரம்பும் ஊடக சந்திப்புகளில் குறிப்பிடவில்லை.

ஈரான் மீதான போர் என்பதே, அங்குள்ள ஆட்சியை நீக்குவதே என்ற நிலையில், காணொளியில் பேசிய நெதன்யாகு, அது ஈரான் மக்களின் முடிவு, நாங்கள் ஆதரவளிப்போம் என குறிப்பிடுகிறார்.

அமெரிக்க பொதுமக்களே தற்போது நெதன்யாகு எங்கே என்ற கேள்வியை முன்வைக்கத் தொடங்கியுள்ளனர். ஆனால், நெதன்யாகு நலமுடன் இருக்கிறார் என்பது மட்டும் அவரது அலுவலகத்தால் கூறப்பட்டு வருகிறது.

நெதன்யாகுவின் மகன் யாயிர் நெதன்யாகு பொதுவாக தமது தந்தையின் அரசியல் நடவடிக்கைகளை ஆதரித்து சமூக ஊடகங்களில் தொடர்ச்சியாகப் பதிவிட்டு வருபவர், சமீப நாட்களில் அவரும் மாயமாகியுள்ளார்.

நெதன்யாகு கொல்லப்பட்டதாக கூறப்படும் மார்ச் 9 ஆம் திகதிக்கு பின்னர் அவர் தொடர்பிலும் தகவல் இல்லை. ஈரான் மீதான போரால் தற்போது மத்திய கிழக்கு நாடுகள் கடும் நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது.

தாங்கள் தொடங்காத ஒரு போரால், ஈரானிடம் இருந்து பதிலடியை எதிர்கொள்ளும் மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது மத்திய கிழக்கு நாடுகள்.