Paristamil Navigation Paristamil advert login

தொலைபேசி மூலம் இலங்கைக்கு நன்றி தெரிவித்த ஈரான்

தொலைபேசி மூலம் இலங்கைக்கு நன்றி தெரிவித்த ஈரான்

14 பங்குனி 2026 சனி 17:35 | பார்வைகள் : 194


ஈரான் வெளிவிவகார அமைச்சர் செய்யித் அப்பாஸ் அராக்சி இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்துடன் நேற்று (13) தொலைபேசி ஊடாகக் கலந்துரையாடியுள்ளார்.

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய இராணுவத் தாக்குதல்களைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து இலங்கை வெளிவிவகார அமைச்சருக்கு விளக்கமளித்ததாக, ஈரானிய வெளிவிவகார அமைச்சர் 'X' தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இச்சம்பவத்தின் போது பாதிக்கப்பட்ட 'ஐரிஸ் டெனா' (IRIS Dena) எனும் ஈரானியப் போர்க்கப்பலின் பணியாளர்களை மீட்பதற்கு இலங்கை அரசாங்கம் வழங்கிய உதவிகளுக்கு இதன்போது அராக்சி தனது நன்றியைத் தெரிவித்தார்.

அத்துடன், உயிரிழந்த 84 பணியாளர்களின் சடலங்களை ஈரானுக்குத் திருப்பி அனுப்புவதற்கு இலங்கை வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்தமைக்காகவும் அவர் தனது நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.

இதேவேளை, இரு வெளிவிவகார அமைச்சர்களும் இருதரப்பு உறவுகள் தொடர்பான விடயங்கள் குறித்து கலந்துரையாடியதுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான தொடர்ச்சியான ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தையும் மீண்டும் உறுதிப்படுத்தினர்.