Paristamil Navigation Paristamil advert login

5 ஆண்டு கால ஆட்சி இன்று நிறைவு? - நிலுவை அரசாணைகளை உடனே பிறப்பிக்க ஆணை

5 ஆண்டு கால ஆட்சி இன்று நிறைவு? - நிலுவை அரசாணைகளை உடனே பிறப்பிக்க ஆணை

14 பங்குனி 2026 சனி 13:10 | பார்வைகள் : 204


தமிழ்நாடு, கேரளா, புதுவையில் ஒரே கட்டமாகவும், மேற்கு வங்காளம், அசாமில் பல்வேறு கட்டங்களாகவும் சட்டசபை தேர்தல் நடத்தப்படுவது வழக்கம். வரும் சட்டசபை தேர்தலிலும் இதே முறை பின்பற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் ஏப்ரல் இரண்டாவது வாரத்திற்கு மேல் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

தி.மு.க. தலைமையிலான அரசு கடந்த 7.5.2021 அன்று பொறுப்பேற்றது. பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை இந்த அரசு அமல்படுத்தியுள்ளது. கடந்த 5 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த இந்த ஆட்சி இன்று (14-ந் தேதி) நிறைவடையும் என்று கூறப்படுகிறது. ஏனென்றால், நாளை (15-ந் தேதி), தமிழக சட்டசபைக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக தெரிய வந்துள்ளது..தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனேயே, மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வரும்.

இது நடைமுறைக்கு வந்ததும், அரசுப் பணிகளில் புதிய அறிவிப்புகள் வெளியிடுவது மற்றும் அரசு இயந்திரத்தை அரசியல் ஆதாயத்திற்காகப் பயன்படுத்துவது தடை செய்யப்படும். முதல்-அமைச்சர், அமைச்சர்கள் யாரும் அரசு வாகனங்களை பயன்படுத்த முடியாது. தலைமைச் செயலகத்திற்கு வந்து அவர்கள் ஆலோசனை செய்ய முடியாது. முக்கிய திட்டங்களை அறிவிக்கவும் முடியாது. ஏதாவது மிக முக்கிய பிரச்சினை என்றால் மட்டுமே அரசு உயர் அதிகாரிகளை முதல்-அமைச்சர் அல்லது அமைச்சர்கள் அழைத்து ஆலோசிக்கலாம். அதுவும், தேர்தல் கமிஷனின் உத்தரவை பெற்றுத்தான் செயல்பட முடியும்.

அடுத்த ஆட்சி அமையும் வரை இந்த அரசு காபந்து அரசாக செயல்படலாம். 15-ந் தேதி தேர்தல் தேதி அறிவிக்கப்படுகிறது என்றால், இன்றுதான் (14-ந் தேதி) இந்த ஆட்சியின் நிறைவு நாளாக இருக்கும். எனவே முக்கிய துறைகளின் அதிகாரிகளை, இன்று விடுமுறை நாளென்றாலும் மேலதிகாரிகள் வேலைக்கு வரவழைத்துள்ளதாக கூறப்படுகிறது. நிலுவையில் உள்ள சில ஆணைகளுக்கான கோப்புகளை முடித்து வைக்கவும், கோப்புகளை நிலுவையில் வைக்காமல் இறுதி செய்யவும் அந்த அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.