இலங்கையில் எல்-நினோ நிலை ஏற்பட்டால் செப்டம்பர் வரை வறட்சி நீடிக்கும் அபாயம்
9 சித்திரை 2026 வியாழன் 13:46 | பார்வைகள் : 182
தென்மேற்கு பருவமழைக் காலத்தில் எல்-நினோ நிலை ஏற்பட்டால், வரும் செப்டம்பர் மாதம் வரை வறட்சியான காலநிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று (09) அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அத் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமான்னகே, இந்த நிலைமையைக் கருத்திற்கொண்டு குடிநீர் மற்றும் அனைத்து நீர்ப்பாசன நடவடிக்கைகளிலும் முறையான நீர் முகாமைத்துவத்தை மேற்கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்டார்.
மேலும், தற்போது நிலவும் வெப்பமான வானிலை இந்த மாதம் முழுவதிலும் தொடரும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் விளக்கமளித்தார்.
அவர் மேலும் கூறுகையில்:
"தற்போது நிலவும் இந்த வெப்பமான சூழல் இந்த மாதம் முழுவதும் ஏற்ற இறக்கங்களுடன் நீடித்து, அடுத்த மாதத்தின் முதல் இரண்டு அல்லது மூன்று வாரங்கள் வரை தொடரும் என எதிர்பார்க்கிறோம். மே 20 ஆம் திகதி அளவில் தென்மேற்கு பருவமழை ஆரம்பமாகும். பருவமழை ஆரம்பிக்கும் போது வெப்பம் சற்று குறையும். எவ்வாறாயினும், தற்போது உணரப்படும் கடுமையான அசௌகரியமான நிலைமை மே மாதம் மூன்றாவது வாரத்திற்குப் பிறகு பெரும்பாலும் நீங்கிவிடும் என நம்புகிறோம்.
அதேவேளை, இந்த தென்மேற்கு பருவமழைக் காலத்தில் எல்-நினோ நிலை உருவானால் ஜூன், ஜூலை மற்றும் ஓகஸ்ட் மாதங்களில் மழைவீழ்ச்சி குறைந்து, செப்டம்பர் மாதம் வரை வறட்சி நிலவும். இதனால் குடிநீர் மற்றும் அனைத்து நீர்ப்பாசன நடவடிக்கைகளுக்கும் நீரை முகாமைத்துவம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும். குறிப்பாக வருங்காலத்தில் இது குறித்து அதிக அவதானம் செலுத்த வேண்டியிருக்கும்."






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan