Paristamil Navigation Paristamil advert login

சர்ச்சையை ஏற்படுத்திய அரசன்பட விவகாரம்...!

சர்ச்சையை  ஏற்படுத்திய அரசன்பட  விவகாரம்...!

8 சித்திரை 2026 புதன் 16:08 | பார்வைகள் : 196


எஸ்.தாணு தயாரிக்க, வெற்றிமாறன் இயக்க, அனிருத் இசையமைக்க, சிலம்பரசன், விஜய் சேதுபதி மற்றும் பலர் நடிக்கும் 'அரசன்' படத்தின் படப்பிடிப்பு கடந்த வாரம் திடீரென நிறுத்தப்பட்டது. தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்களின் தலையீட்டால் படப்பிடிப்புக்கு எந்தத் தொழிலாளர்களும் வரவில்லை.

பிரபல தயாரிப்பாளரான ஐசரி கணேஷ் கொடுத்த புகாரின் பேரில் தான் இது நடந்துள்ளது என்கிறார்கள். அவரிடமிருந்து சிம்பு பெற்ற முன்பணத்தைத் திருப்பிக் கொடுக்காமல் அவர் இந்தப் படத்தில் நடிப்பதால் அவர் புகார் அளித்துள்ளதாகச் சொல்கிறார்கள்.

மேலும் இந்த முன்பணத்திற்காக அவர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்துள்ளார். ஆனால், அந்த வழக்கு சிம்புவுக்கே சாதகமாக வந்தது. இந்நிலையில் படப்பிடிப்பை நிறுத்தி வைப்பது நியாயமல்ல என்று சிம்புவின் அப்பா டி ராஜேந்தர் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

இந்த விவகாரத்தில் நியாயமற்ற முறையில் தயாரிப்பாளர் சங்கமும், பெப்ஸியும் நடந்து கொள்வதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

சிம்பு தர வேண்டிய முன்பணத் தொகைக்காக 'அரசன்' படப்பிடிப்பு நிறுத்துகிறார்கள் என்றால், அதேப்போல தயாரிப்பாளர் சங்கத்தின் முன்னாள் தலைவர் தேனாண்டாள் முரளி ராமசாமிக்கு தனுஷ் தர வேண்டிய தொகை உள்ளது. ஆனால், அவரை வைத்து மட்டும் 'கர' படத்தை எப்படி ஐசரி கணேஷ் தயாரித்தார் என்றும் திரையுலகில் கேள்வி எழுப்புகிறார்கள்.

தயாரிப்பாளர் சங்கத்தின் முன்னாள் தலைவரும், நடிகர் சங்கத்தின் செயலாளராக இருக்கும் விஷால், லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்திற்குத் தர வேண்டிய தொகை நீதிமன்ற வழக்கில் இருக்கிறது. அவருடைய படங்களும் எந்தத் தடையும் இல்லாமல் நடந்து வருகிறது.

சிம்புவுக்கு ஒரு நியாயம், தனுஷ், விஷாலுக்கு வேறு நியாயமா என்பது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர் இணைந்து உருவாக்கி வரும் 'அரசன்' படப்பிடிப்பை சங்கங்கள் நினைத்தால் தடுக்க முடியுமா என்றும் அது சட்டப்படி சரியா என்றும் சிம்பு ரசிகர்கள் கேட்கிறார்கள்.