Paristamil Navigation Paristamil advert login

ஈராக் தலைநகரில் கடத்தப்பட்ட அமெரிக்க பெண் ஊடகவியலாளர்

ஈராக் தலைநகரில் கடத்தப்பட்ட  அமெரிக்க பெண் ஊடகவியலாளர்

1 சித்திரை 2026 புதன் 12:12 | பார்வைகள் : 388


ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஊடகவியலாளர் ஷெல்லி கிட்டில்சன் கடத்தப்பட்டுள்ளதாக ஈராக் மற்றும் அமெரிக்க அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இக்கடத்தல் சம்பவத்தில் ஈரானின் ஆதரவு பெற்ற ஆயுதக் குழுவான 'கதாயிப் ஹிஸ்புல்லா தொடர்புபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

பாக்தாத் நகரின் மையப்பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றிற்கு அருகாமையில் செவ்வாய்க்கிழமை மாலை இக்கடத்தல் இடம்பெற்றுள்ளது.

கடத்தல்காரர்களை ஈராக் பாதுகாப்புப் படைகள் பின்தொடர்ந்து விரட்டியபோது, கடத்தல்காரர்களின் வாகனம் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஒரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர் ஈரானின் ஆதரவு பெற்ற கதாயிப் ஹிஸ்புல்லா அமைப்பைச் சேர்ந்தவர் என அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஷெல்லி கிட்டில்சன் நீண்டகாலமாக ஆப்கானிஸ்தான், ஈராக் மற்றும் சிரியா போன்ற போர் வலயங்களில் பணியாற்றி வரும் ஒரு அனுபவமிக்க ஊடகவியலாளர் ஆவார்.

கதாயிப் ஹிஸ்புல்லா அமைப்பின் கடத்தல் பட்டியலில் இவரது பெயர் இருந்ததாக அமெரிக்க அதிகாரிகள் இவருக்கு ஏற்கனவே பலமுறை எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

கடத்தப்படுவதற்கு முதல் நாள் (திங்கட்கிழமை இரவு) கூட இவருக்கு அச்சுறுத்தல் குறித்து எச்சரிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இவரை மீட்பதற்காக எப்.பி.ஐ , அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் மற்றும் ஈராக் பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவினர் இணைந்து செயற்பட்டு வருகின்றனர்.

இவரைப் பாதுகாப்பாக மீட்பதற்கு உயர்மட்ட அளவில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக ஈராக் உள்நாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது.

ஷெல்லி கிட்டில்சன் பணியாற்றும் 'அல்-மானிட்டர்' செய்தி நிறுவனம், அவரது பாதுகாப்பு தொடர்பில் மிகுந்த கவலை வெளியிட்டுள்ளதுடன், அவரை உடனடியாக விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளது.