இபிஎஸ் குற்றச்சாட்டுக்கு என்னிடம் பதில் இல்லை: பிரேமலதா
30 பங்குனி 2026 திங்கள் 11:18 | பார்வைகள் : 202
அங்கீகாரம் இல்லாத கட்சி தேமுதிக என்ற இபிஎஸ் குற்றச்சாட்டுக்கு என்னிடம் பதில் இல்லை. ஏன் அவர் அப்படி சொன்னார் என்பது குறித்து அவரிடமே கேட்க வேண்டும் என பிரேமலதா கூறியுள்ளார்.
சென்னையில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
விருத்தாசலம் எப்போதும் தேமுதிகவின் கோட்டை. விஜயகாந்த்துக்கு முதலில் வெற்றியை கொடுத்த தொகுதி. எங்களின் உணர்விலும், ரத்தத்திலும் உள்ள தொகுதி. இந்தாண்டு மாநாட்டை முதலில் விருத்தாசலத்தில் தான் நடத்தினோம். தேமுதிகவும், விருத்தாசலமும் வேறு வேறு அல்ல. ஒன்றுதான். ஏற்கனவே எம்எல்ஏக்களாக இருந்த 3 பேருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. புதியவர்களுக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. பிரதாப் மற்றும் விஜயபிரபாகரன் என்ற இரண்டு இளைஞர்களுக்கும் வாய்ப்பு வழங்கியிருக்கிறோம்.
பார்த்தசாரதி, நல்லதம்பி ஆகியோருக்காக அவர்கள் ஏற்கனவே வெற்றி பெற்ற விருகம்பாக்கம், எழும்பூர் தொகுதிகளை கேட்டோம். ஆனால், இந்த முறை சென்னையில் அனைத்து தொகுதிகளிலும் திமுக வேட்பாளர்கள் தான் என எங்களிடம் முன்னரே கூறிவிட்டனர். இதில் மன வருத்தம் கிடையாது. நாங்கள் வெற்றி பெற்றாலும் அவர்கள் எங்களின் வலதுகையாக இருந்து பணியாற்றுவார்கள்.
பல்லாவரம் தொகுதியை அனகை முருகேசனுக்கு கொடுத்துள்ளனர். அவர் ஏற்கனவே செங்கல்பட்டு தொகுதியில் வெற்றி பெற்றவர். இருந்தாலும் இம்முறை பல்லாவரம் தொகுதியில் போட்டியிடுகிறார். எங்களுக்கு கிடைத்த தொகுதியை மனப்பூர்வமாக ஏற்கிறோம். எங்கள் பணி மக்களுக்காக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
தேமுதிக அங்கீகரிக்கப்பட்ட கட்சி இல்லை என்ற இபிஎஸ் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு பதிலளத்த பிரேமலதா, 3வது அங்கீகரிக்கப்பட்ட கட்சி தேமுதிக என உலகில் அனைவருக்கும் தெரியும். அங்கீகரிக்கப்பட்ட கட்சி என்பதால் தான் அத்தனை தொகுதிகளிலும் முரசு சின்னத்தில் போட்டியிடுகிறோம். ஏன் அவர் அப்படி சொன்னார் என அவரிடம் தான் கேட்க வேண்டும்' என்றார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan