Paristamil Navigation Paristamil advert login

மேற்காசிய போரால் ஏற்பட்ட சவால்களை அரசியலாக்க வேண்டாம்; பிரதமர் மோடி வலியுறுத்தல்

மேற்காசிய போரால் ஏற்பட்ட சவால்களை அரசியலாக்க வேண்டாம்; பிரதமர் மோடி வலியுறுத்தல்

30 பங்குனி 2026 திங்கள் 10:14 | பார்வைகள் : 299


மேற்காசிய போரால் ஏற்பட்ட சவால்களை அரசியலாக்க வேண்டாம் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினருக்கு பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

'மன் கீ பாத்' நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது; மேற்காசியாவில் நிலவி வரும் போர் காரணமாக நிச்சயமற்ற சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், உருவாகியுள்ள சவால்களை நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து முறியடிக்க வேண்டும். இந்த விஷயத்தில் யாரும் அரசியல் செய்யக் கூடாது. இது 140 கோடி மக்களின் நலன் சார்ந்த விஷயமாகும். எனவே, வதந்திகளைப் பரப்புபவர்கள் நாட்டுக்கு பெரும் தீங்கை விளைவிப்பவர்களாவார்.

யாரும் வதந்திகளை நம்ப வேண்டாம். அரசு வழங்கும் தகவல்களை மட்டுமே நம்ப வேண்டும். 140 கோடி மக்களின் வலிமையால், கடந்த கால நெருக்கடிகளை (கொரோனா) எப்படி நாம் வென்றோமோ, அதேபோல இந்த கடினமான சூழ்நிலையில் இருந்து நாம் வெற்றிகரமாக வெளியே வருவோம் என்று நம்புகிறேன்.

இந்தியாவின் தொன்மையான கலாசாரத்தை பறைசாற்றும் ஆவணங்களைப் பாதுகாக்கும் விதமாக, ஞான பாரதம் என்ற கணக்கெடுப்பு தொடங்கப்பட்டுள்ளது. ஜூன் 2வது வாரம் வரை நடக்கும் இந்தக் கணக்கெடுப்பில் நாட்டு மக்கள் பங்கேற்று, தங்களிடம் உள்ள தொன்மையான கலாசார ஆவணங்களைப் , 'ஞான பாரதம்' செயலியில் பதிவேற்றம் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில், தண்ணீரை சேமிப்பதில் மக்கள் ஈடுபட வேண்டும். .  ஏற்கனவே, சர்க்கரை மற்றும் சமையல் எண்ணெய் பயன்பாட்டை 10 சதவீதம் குறைக்குமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தேன்.

அப்படி செய்தால், சர்க்கரை நோய் மற்றும் உடல் பருமன் போன்ற நோய்களில் இருந்து நம்மை காத்துக் கொள்ளலாம். 'பிஎம் சூர்ய கர் முப்ட் பிஜிலி யோஜனா' என்ற சோலார் திட்டத்தின் மூலம் மின் கட்டணம் குறைவதுடன், இளைஞர்கள் தொழில்முனைவோராக மாறுகின்றனர், இவ்வாறு அவர் கூறினார்.