Paristamil Navigation Paristamil advert login

சிரித்துக்கொண்டே அழுவதாக தி.மு.க., கூட்டணியினர் புலம்பல்:பழனிசாமி

சிரித்துக்கொண்டே அழுவதாக தி.மு.க., கூட்டணியினர் புலம்பல்:பழனிசாமி

28 பங்குனி 2026 சனி 12:07 | பார்வைகள் : 187


நான், தேர்தல் பிரசாரத்தை துவங்கியதும், முதல்வர் ஸ்டாலினுக்கு தோல்வி பயம் வந்து விட்டது, என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தெரிவித்தார்.

சட்டசபை தேர்தலுக்கான பிரசாரத்தை துவங்கியுள்ள பழனிசாமி நேற்று, சென்னை ஆலந்துாரில் பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது, அவர் பேசியதாவது:

நான், கடந்த 25ம் தேதி, பிரசாரத்தை துவங்கியபோதே, முதல்வர் ஸ்டாலினுக்கு தோல்வி பயம் வந்து விட்டது. என் பேச்சுக்கு, மூன்று அமைச்சர்களை விட்டு பதில் சொல்ல வைத்திருக்கிறார்.

தி.மு.க., கூட்டணியில், கடந்த 25 நாட்களாக திரும்பத் திரும்ப பேசியும், ஸ்டாலினால் உடன்பாட்டை எட்ட முடியவில்லை. ஆனால், நான்கே நாட்களில், அ.தி.மு.க., கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டை முடித்து விட்டோம்.

தி.மு.க., கூட்டணி கட்சித் தலைவர் ஒருவர் பேச்சு நடத்தி விட்டு வெளியே வந்து, 'சிரித்துக் கொண்டே அழுகிறோம்' என்கிறார்.

வி.சி.க., போன்ற கட்சிகளுக்கு எந்த தொகுதிகள் என அறிவிக்கவில்லை. 10  ஆண்டுகள், தி.மு.க., கூட்டணியில் விசுவாசமாக இருந்து, மக்கள் பிரச்னைகளுக்கு கூட குரல் கொடுக்காத கட்சிகளுக்கு, ஒரு தொகுதியை ஸ்டாலின் குறைத்திருக்கிறார்.

ஆனால், சமீபத்தில், கூட்டணியில் சேர்ந்த கட்சிக்கு, அதிக இடங்களை அள்ளிக் கொடுத்திருக்கிறார்.

அ.தி.மு.க.,வைப் பொறுத்தவரை தேர்தலில் கூட்டணி வைப்போம். தேர்தல் முடிந்த பின், அந்தந்த கட்சிகள், அவர்கள் கொள்கைப்படி மக்கள் பிரச்னைகளை முன்வைப்பர்.

இது, தே.ஜ., கூட்டணியின் தர்மம். ஆனால், தி.மு.க., அரசின் தவறுகளையும், கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமைகளையும், தி.மு.க., கூட்டணி கட்சிகள் கண்டிக்கவில்லை.

கடந்த 2011ல் கருணாநிதி இருக்கும்போதே, தி.மு.க.,வுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கூட கிடைக்கவில்லை.

ஆனால், ஜெயலலிதா மறைவுக்குப் பின் நடந்த 2021 தேர்தலில், 75 இடங்களில் வென்றோம்; இதுதான் சாதனை. தி.மு.க.,வின், 'பி டீம்' ஆக இருந்து, அ.தி.மு.க.,வில் குழி தோண்டிக் கொண்டிருந்த சில விஷமிகள், இப்போது அடையாளம் காட்டப்பட்டுள்ளனர்.

கொரானா காலத்திலும், சிறப்பான ஆட்சியை அ.தி.மு.க. கொடுத்தது. மீண்டும், அ.தி.மு.க.,வுக்கு வாய்ப்பளித்தால், நாடே வியக்கும் அளவுக்கு அற்புதமான ஆட்சியைக் கொடுப்போம். இவ்வாறு அவர் பேசினார்.

இதைத்தொடர்ந்து, சென்னை தாம்பரத்தில் பிரசாரம் மேற்கொண்ட பழனிசாமி பேசியதாவது:

தி.மு.க., கூட்டணி, கொள்கை கூட்டணி என முதல்வர் ஸ்டாலின், அடிக்கடி கூறுவார். கொள்கை கூட்டணி என்றால், புதுச்சேரியில் ஏன் எதிர்த்து நிற்கிறீர்கள்? தமிழகத்தில் கொள்கை இருக்கிறது; புதுச்சேரியில் கொள்கை இல்லையா?

ஒரே கொள்கை என்றால், கேரளத்தில் கம்யூனிஸ்டுகளும், காங்கிரசும் ஏன் போட்டி போட வேண்டும்? பச்சோந்தி கூட கொஞ்ச நேரம் கழித்து தான் நிறம் மாறும், ஆனால் அடிக்கடி நிறம் மாறும் கட்சி தி.மு.க.,

தமிழகத்தில், இன்னொரு கட்சி இருக்கிறது. எல்லாரும் மரணத்துக்கு துக்கம் விசாரிப்பர். ஆனால், இறந்தவர்கள் குடும்பத்தினரை வரவழைத்து, அக்கட்சி தலைவர் அனுதாபம் சொல்கிறார்.

சினிமாவை பார்க்கலாம், ரசிக்கலாம், அதோடு விட்டுவிட வேண்டும். நிஜ வாழ்க்கை வேறு, சினிமா வேறு என்பதை, இளைஞர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.