Paristamil Navigation Paristamil advert login

முரசொலி அறக்கட்டளை செயல்பாடுகள்; சி.பி.ஐ., விசாரிக்க பா.ஜ., நிர்வாகி வழக்கு

முரசொலி அறக்கட்டளை செயல்பாடுகள்; சி.பி.ஐ., விசாரிக்க பா.ஜ., நிர்வாகி வழக்கு

28 பங்குனி 2026 சனி 08:52 | பார்வைகள் : 216


முரசொலி அறக்கட்டளையின் சட்டவிரோத செயல்பாடுகள் தொடர்பாக, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிடக் கோரிய மனுவுக்கு, சி.பி.ஐ., மற்றும் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் பதிலளிக்கும்படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

முரசொலி அறக்கட்டளையின் சட்டவிரோத செயல்பாடுகள் தொடர்பாக, கடந்த 12 மற்றும் 17ம் தேதி அளித்த புகார் மனுவை பரிசீலித்து, சி.பி.ஐ., விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் திருநெல்வேலியைச் சேர்ந்த வழக்கறிஞர் கே.வெங்கடாசலபதி என்பவர் பொது நல வழக்கு தொடர்ந்தார்.

இந்த மனு, நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் தாமசேஷாத்ரி நாயுடு ஆஜராகி, ''பஞ்சமி நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு, முரசொலி அலுவலகம் கட்டப்பட்டு உள்ளது என்ற புகார் உள்ளது.

அறக்கட்டளைக்கு கடந்தாண்டு மார்ச் 31ம் தேதி நிலவரப்படி, 143.40 கோடி ரூபாய் நிதி உள்ளது. நில உரிமை தொடர்பாகவும் முரண்பாடுகள் உள்ளன. ''தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம், உண்மையை கண்டறிய உதவும் எவ்வித விசாரணை பிரிவை கொண்டிருக்கவில்லை.

பரிந்துரைக்கும் அமைப்பு என்பதால், இவ்விவகாரம் குறித்து சி.பி.ஐ., விசாரிக்க உத்தரவிட வேண்டும், என்றார்.

முரசொலி அறக்கட்டளை சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆஜராகி, ''வழக்கறிஞர் என கூறி, பொது நல மனு தாக்கல் செய்துள்ள மனுதாரர், பா.ஜ.,வின் திருநெல்வேலி மாவட்டச் செயலர்.

உண்மையை மறைத்து, அரசியல் உள்நோக்குடன் இந்த வழக்கு தொடரப்பட்டு உள்ளது. 2020ம் ஆண்டில், பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய அமைச்சர் எல்.முருகன், தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத் தலைவராக பணியாற்றியபோது, முரசொலி பிரச்னைக்கு வித்திடப்பட்டது, என்றார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், முரசொலி அலுவலகம் விவகாரம் தொடர்பாக நீதிமன்றம் எதுவும் கூறவில்லை. தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம், இது தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது' என்றனர்.

மேலும், இந்த மனு குறித்து, சி.பி.ஐ., மற்றும் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம், முரசொலி அறக்கட்டளை உள்ளிட்டவை பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளி வைத்தனர்.