பெண்கள் குறித்து இழிவான பேச்சு; டி.ஜி.பி., அலுவலகத்தில் விஜய் புகார்
27 பங்குனி 2026 வெள்ளி 10:35 | பார்வைகள் : 192
பெண்கள் குறித்து இழிவாகப் பேசிய, அரசியல் விமர்சகர் பொன்ராஜ் மீது, நடவடிக்கை எடுக்கும்படி, த.வெ.க., தலைவர் விஜய், நேற்று புகார் அளித்தார்.
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமிடம் உதவியாளராக இருந்த பொன்ராஜ், பேட்டி ஒன்றில் பேசியபோது, த.வெ.க.,வைச் சேர்ந்த பெண்களை, 'விபசாரிகள்' என, இழிவாக கருத்து தெரிவித்திருந்தார். இதையடுத்து, அவர் மீது புகார் அளிப்பதற்காக, த.வெ.க., தலைவர் விஜய், நேற்று இரவு, சென்னை டி.ஜி.பி., அலுவலகம் சென்றார்.
பின், தமிழக சட்டம் - ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி,யிடம், விஜய் அளித்த புகார் மனுவில் கூறியதாவது:
தி.மு.க.,வின் அதீத ஆதரவாளராக செயல்பட்டு வரும் பொன்ராஜ், தமிழகம் முழுதும் இருக்கும், என் அம்மா, அக்கா, தங்கைகளை தரம் தாழ்ந்து பேசியுள்ளார். குறிப்பாக, ஒட்டுமொத்த தமிழகப் பெண்கள் இனத்தையே, ஆபாச வார்த்தைகளைக் கூறி, மிகவும் கீழ்த்தரமாக விமர்சித்து வருகிறார்.
தி.மு.க., அரவணைப்பில் இருப்பதால், தன்னை யாராலும் கட்டுப்படுத்த இயலாது என்ற நினைப்பில், எல்லை கடந்து அநாகரிகமாக, அவர் பேசி வருகிறார். தமிழக மகளிரை மிக மோசமாக பேசி வரும், அந்த நபர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
விஜயுடன் வந்த, த.வெ.க., கொங்கு மண்டல அமைப்பு செயலர் செங்கோட்டையன் கூறுகையில், ''பெண்களை, மிக கீழ்த்தரமாக விமர்சித்த பொன்ராஜுக்கு, தி.மு.க., பின்புலம் உள்ளது. தரம் தாழ்ந்து பேசியது மட்டுமல்லாமல், மன்னிப்பும் கேட்க முடியாது எனக் கூறியுள்ளார். அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.
கண்டனம் தெரிவித்த அ.தி.மு.க.,
அ.தி.மு.க., வெளியிட்ட அறிக்கை: தமிழக பெண்களை, 'விபசாரிகள்' என கீழ்த்தரமாக விமர்சித்ததோடு, மன்னிப்பும் கேட்க மாட்டேன் என, தி.மு.க., ஆதரவாளர் பொன்ராஜ் பேசியுள்ளார். தி.மு.க.,வினரின் கேவலமான பார்வையை, மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தி உள்ளார். முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் உதவியாளர் என, தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் இந்த நபரின் பேச்சுகள், கண்ணியத்தின் உறைவிடமான கலாமின் புகழுக்கே இழுக்கை ஏற்படுத்துகிறது. கடந்த ஐந்தாண்டுகளாக, ஆட்சி செய்தவர்கள் எப்படிபட்ட நபர்கள் என்பதை, தமிழக பெண்கள் தற்போது உணர்ந்திருப்பர். சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, எஸ்.வி.சேகர், பொன்ராஜில் துவங்கி, இணையதளத்தில் போலி பெயருடன் திரியும், தி.மு.க.,வைச் சேர்ந்த பல ஆபாசவாதிகளின் முகத்திரைகள் விரைவில் கிழித்தெறியப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதுபோல, த.வெ.க., தலைவர் விஜய் வெளியிட்ட அறிக்கையில், 'போற்றுதலுக்கும் உரிய என் அம்மா, அக்கா, தங்கைகளை தரக்குறைவான வார்த்தையால், தி.மு.க.வின் ஆதரவாளராக செயல்படும் கைக்கூலி ஒருவர் வாய்க்கு வந்தபடி விமர்சித்திருக்கிறார். தி.மு.க., தலைமையின் அரவணைப்பில் செயல்படும் ஆதாய சூதாடிகளையும், அவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காத தி.மு.க., அரசையும் கண்டிக்கிறேன்,' என குறிப்பிட்டுள்ளார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan