Paristamil Navigation Paristamil advert login

திருடர்களிடம் ஆட்சி: சீமான் கடும் விமர்சனம்

திருடர்களிடம் ஆட்சி: சீமான் கடும் விமர்சனம்

26 பங்குனி 2026 வியாழன் 07:12 | பார்வைகள் : 970


என் நிலத்தில், வட மாநிலத்தவருக்கு அரசியல் அதிகாரத்தை வழங்கினால், நாட்டை விட்டே வெளியேறுவதை தவிர வேறு வழியில்லை, என, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, தளி, பர்கூர், ஓசூர், வேப்பனஹள்ளி தொகுதிகளில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, கெலமங்கலம் ராயக்கோட்டையில், சீமான் நேற்று பிரசாரம் செய்தார். அப்போது, அவர் பேசியதாவது:

மாற்றம் மாற்றம் என்று சொல்லும் அரசியல் கட்சிகள் எல்லாம், இலவசம் என்கிற கவர்ச்சி திட்டத்தை அறிவிக்கின்றனர். ஒருவர் கையேந்தினால் பிச்சை எடுக்கிறான் என சொல்வீர்கள், எல்லோரும் கையை ஏந்தினால், அது பிச்சை இல்லாமல் இலவசம் ஆகி விட்டது.

திருடர்களிடம், திரும்பத் திரும்ப ஆட்சியை கொடுத்ததால், அவன் திருடிய காசில், 1,000 ரூபாய், 2,000 ரூபாய் என பங்கு கொடுக்கிறான்.

அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் 10,000 ரூபாய் தருகிறோம், மகளிருக்கு 2,000 ரூபாய், பிரிஜ் தருவோம், என்கின்றனர்.

இதெல்லாம் ஒரு திட்டமா, நாட்டையும், மண்ணையும் விற்று, கடன் வாங்கி கொடுப்பீர்களா? மக்களுக்கு, 2,000 ரூபாய் தருகிறோம், 5,000 ரூபாய் தந்து விட்டோம் எனக்கூறும், தி.மு.க., அரசு, கல்வி, மின்சாரம், மருத்துவம் போன்றவற்றை ஏன் இலவசமாக தரவில்லை? இலவச திட்டங்களை அறிவிக்கும் கட்சிகள், சாராயத்தை ஒழிப்போம் என, ஏன் கூறுவதில்லை?

இலவசங்களை கொடுத்து, மக்கள் வேலை செய்வதை தடுத்து விட்டு, வட மாநிலங்களில் இருந்து வேலைக்கு ஆட்களை கொண்டு வந்ததோடு, எஸ்.ஐ.ஆர்., வாயிலாக, ஒன்றரை கோடி வட மாநிலத்தவருக்கு ஓட்டும் வாங்கி கொடுத்து விட்டார்கள். என் நிலத்தின் அரசியல் அதிகாரத்தை, அவன் முடிவு செய்யப்போகிறான்.

ஏற்கனவே மொழி, வரலாறு, வழிபாடு உள்ளிட்டவற்றை விட்டு வெளியேறி விட்டோம், அடுத்து, இந்த நாட்டை விட்டு வெளியேறுவது தவிர வழி இல்லை. நான்  உங்களுக்கு போதிக்கும் போது புரியாது, நீங்கள் பாதிக்கும் போது தான் புரியும். இவ்வாறு அவர் பேசினார்.