Paristamil Navigation Paristamil advert login

ஈரான் தாக்குதலில் இஸ்ரேலில் 4 இலங்கையர்கள் காயம்

ஈரான் தாக்குதலில் இஸ்ரேலில் 4 இலங்கையர்கள் காயம்

22 பங்குனி 2026 ஞாயிறு 12:55 | பார்வைகள் : 182


இஸ்ரேலின் டிமோனா பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற ஏவுகணைத் தாக்குதலில் காயமடைந்த நான்கு இலங்கையர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.

தூதுவரின் கூற்றுப்படி, குறித்த நபர்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லாமல், திறந்த வெளியில் நின்றுகொண்டு இச்சம்பவத்தை காணொளி எடுக்க முயற்சித்த போதே காயமடைந்துள்ளனர். இது தொடர்பான காணொளிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

ஏவுகணைத் தாக்குதலினால் அருகில் இருந்த கட்டிடங்களின் கண்ணாடிகள் உடைந்ததில், அதன் சிதறல்கள் இவர்களது தலை மற்றும் உடலின் ஏனைய பகுதிகளில் பட்டதால் ஏற்பட்ட காயங்களுக்கு சிகிச்சை பெறுவதற்காகவே இவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இத்தகையச் செயல்கள் இஸ்ரேலிய அதிகாரிகளினால் வழங்கப்பட்ட பாதுகாப்பு அறிவுறுத்தல்களை மீறும் செயல் என தூதுவர் பண்டார சுட்டிக்காட்டியுள்ளார்.

ஏவுகணைத் தாக்குதலுக்கு சுமார் மூன்று நிமிடங்களுக்கு முன்னதாகவே எச்சரிக்கை சைரன் ஒலிக்கப்படுவதால், அந்தச் சத்தம் கேட்டவுடன் இலங்கையர்கள் அனைவரும் உடனடியாக ஒதுக்கப்பட்ட பாதுகாப்பு இடங்களுக்குச் செல்லுமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.

பிராந்தியத்தில் நிலவும் தற்போதைய பாதுகாப்பு சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, பாதுகாப்பு வழிகாட்டுதல்களைக் கண்டிப்பாகப் பின்பற்றுவதன் முக்கியத்துவத்தை இலங்கை அதிகாரிகள் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றனர்.