Paristamil Navigation Paristamil advert login

ஹார்முஸ் நீரிணையில் அமெரிக்க விமானப்படை....

ஹார்முஸ் நீரிணையில் அமெரிக்க விமானப்படை....

20 பங்குனி 2026 வெள்ளி 13:40 | பார்வைகள் : 379


ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறக்கும் வகையில், ஈரானின் கப்பல்கள் மற்றும் ட்ரோன் அச்சுறுத்தலை முறியடிக்க, அமெரிக்கப் படைகளுக்கு டொனால்ட் ட்ரம்ப் அழைப்பு விடுத்துள்ளார்.

ஈரான் ஹார்முஸ் நீரிணையை தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதால், உலகளாவிய எரிபொருள் விநியோகம் கடுமையான அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளது.

இதன் வழியாகவே உலகின் எண்ணெய் வளத்தில் ஐந்தில் ஒரு பங்கு கொண்டு செல்லப்படுகிறது. ஆனால் ஈரான் மீது இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து போர் தொடுத்துள்ள நிலையில், கப்பல் போக்குவரத்தை ஈரான் மொத்தமாக முடக்கியது.

எதிர்ப்பை மீறினால் தாக்கப்படும் என்ற அச்சுறுத்தலை அடுத்து கப்பல்களுக்கு காப்பீடு நிறுவனங்கள் மறுப்பு தெரிவித்ததை அடுத்தே போக்குவரத்து ஸ்தம்பித்தது.

இந்த நிலையில், ஹார்முஸ் நீரிணையில் ஈரானின் அச்சுறுத்தலை முறியடிக்க தாழ்வாகப் பறக்கும் A-10 Warthogs மற்றும் Apache தாக்குதல் ஹெலிகொப்டர்களை அமெரிக்கப் படைகள் அனுப்பியுள்ளது.

இவை ஈரானின் கப்பல்கள் மற்றும் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தும் என்றே கூறுகின்றனர். இதனிடையே, ஈரானிய ஆயுதங்களால் ஏற்படும் ஆபத்தை முறியடித்து, நீரிணையை மீண்டும் திறக்க பென்டகன் முயற்சித்து வருகிறது.

பிப்ரவரி 28 அன்று போர் தொடங்கியதன் பின்னர் சுமார் 90 கப்பல்கள் மட்டுமே நீரிணையில் பயணப்பட்டுள்ளன. பொதுவாக நாளுக்கு 135 கப்பல்கள் வரையில் ஹார்முஸ் நீரிணையில் பயணப்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில், அந்த நீரிணை வழியாக கப்பல்கள் அப்பகுதிக்குள் நுழைவதற்கும் அங்கிருந்து வெளியேறுவதற்கும், அமெரிக்க இராணுவக் போர்க்கப்பல்கள் பிற கப்பல்களுக்குத் துணையாகச் செயல்படக்கூடும் என்பதே நம்பிக்கையாக உள்ளது.

ஆனால் ஈரானின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள அமெரிக்கா தயக்கம் காட்டி வந்ததுடன், தற்போது போர்க்கப்பல்களை அனுப்பாமல், ஹெலிகொப்டர்களை அனுப்பியுள்ளது.

இருப்பினும், ஹார்முஸ் நீரிணையை முழுமையாகச் சீர்செய்து, மீண்டும் இயல்பு நிலைக்கு நெருக்கமாகச் செயல்பட வைப்பதற்கு அமெரிக்காவிற்குப் பல வாரங்கள் ஆகலாம் என்றே நிபுணர்களின் கருத்தாக உள்ளது.

ஹார்முஸ் நிரிணை விவகாரத்தில் அமெரிக்காவின் நட்பு நாடுகள் பல ட்ரம்பின் கோரிக்கையை எந்த தயக்கமும் இன்றி நிராகரிக்க, அவர் தனித்துவிடப்பட்ட நிலைக்கு தள்ளப்பட்டார்.

இந்த நிலையிலேயே தற்போது அமெரிக்கப் படைகள் ஹெலிகொப்டர்களை நீரிணைக்கு அனுப்பியுள்ளது. இதனிடையே, ஹார்முஸ் நீரிணை வழியாகப் பாதுகாப்பான போக்குவரத்தை உறுதி செய்வதில் பங்களிக்கத் தாங்கள் தயாராக இருப்பதாக ஆறு முக்கிய சர்வதேச வல்லரசுகள் வியாழக்கிழமை தெரிவித்தன.

எனினும், அத்தகைய எந்தவொரு முன்னெடுப்பும் போர்நிறுத்தத்திற்குப் பின்னரே மேற்கொள்ளப்படும் என்று அவற்றில் மூன்று நாடுகள் வலியுறுத்தியுள்ளன.

முன்பு டொனால்ட் ட்ரம்பின் கோரிக்கையை நிராகரித்த பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, ஜப்பான் மற்றும் நெதர்லாந்து நாடுகளே வியாழக்கிழமை தங்கள் நிலையை அறிவித்துள்ளன.

மேலும், உதவ முன்வரும் நாடுகளின் அர்ப்பணிப்பைத் தாங்கள் வரவேற்பதாகவும் அந்தக் குழு தெரிவித்துள்ளது. ஆனால் இத்தாலி, ஜெஜேர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள், தாங்கள் எந்தவொரு உடனடி இராணுவ உதவியைப் பற்றியும் பேசவில்லை என்பதை வியாழக்கிழமை பிற்பகுதியில் தெளிவுபடுத்தின மேலும், போர் நிறுத்தம் உடனடியாக அமுலுக்கு கொண்டுவர வேண்டும் என்றும் இந்த மூன்று நாடுகளும் வலியுறுத்தியுள்ளன.