4 நாட்களில் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்படும் - டெல்லியில் எடப்பாடி பழனிசாமி
20 பங்குனி 2026 வெள்ளி 08:30 | பார்வைகள் : 280
அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, டெல்லியில் நேற்று இரவு மத்திய மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசினார். அப்போது தொகுதி பங்கீடு குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த நிலையில் இன்று காலையில் டெல்லி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-.
தேர்தல் வேலைகள் இருப்பதால் அமித்ஷாவை பார்க்க வந்தேன். அவருடன் தமிழ்நாடு அரசியல் குறித்து பேசினேன். நான்கைந்து மாநிலங்களில் தேர்தல் அறிவிக்கப்பட்டிருப்பதால் அவருக்கு வேலைப்பளு அதிகமாக இருக்கிறது. எனவே நான் வந்து அவரை பார்த்துள்ளேன்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் எந்தவித சிக்கலும் இல்லை. எங்களைப் பொறுத்தவரை எங்கள் கூட்டணிக்கு வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது. எங்கள் கூட்டணிக்கு அதிமுகதான் தலைமை. கூட்டணியில் சேரவேண்டிய கட்சிகள் சேர்ந்துள்ளன. தவெகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை. இதை அவர்களும் சொல்லி விட்டனர். இன்னும் 4 நாட்களில் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்படும். எந்த கட்சிகளுக்கு எங்கு வெற்றி வாய்ப்பு இருக்கிறதோ, அந்தந்த இடங்கள் ஒதுக்கப்படும். ஒரு வாரத்தில் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும்.
அதிமுக ஆட்சியில் எண்ணற்ற திட்டங்களை கொடுத்திருக்கிறோம். மத்திய அரசிடம் இருந்தும் பல்வேறு திட்டங்களை பெற்று நிறைவேற்றியிருக்கிறோம். திமுகவின் இந்த 5 ஆண்டு காலத்தில் எந்த புதிய, பெரிய திட்டமும் இல்லை. சட்டம், ஒழுங்கு அடியோடு சீரழிந்திருக்கிறது. தினந்தோறும் கொலை, கொள்ளை, வழிப்பறி, பாலியல் வன்கொடுமை என நடைபெறாத நாளே இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan