Paristamil Navigation Paristamil advert login

இந்திய மின் உற்பத்தி துறையில் முதலீடு; உலக நாடுகளுக்கு பிரதமர் மோடி அழைப்பு

இந்திய மின் உற்பத்தி துறையில் முதலீடு; உலக நாடுகளுக்கு பிரதமர் மோடி அழைப்பு

20 பங்குனி 2026 வெள்ளி 06:22 | பார்வைகள் : 196


இந்தியாவின் மின் உற்பத்தி துறையில் முதலீடு செய்யவும், புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கவும் சர்வதேச முதலீட்டாளர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

டில்லியில் நேற்று துவங்கிய 'பாரத் மின்சார உச்சி மாநாடு 2026' நிகழ்ச்சியில், பிரதமரின் செய்தியை மத்திய மின்சார துறை செயலர் பங்கஜ் அகர்வால் வாசித்தார். அதில் மோடி மேலும் கூறியுள்ளது: உலகின் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரமாக இந்தியா திகழ்கிறது. நாட்டின் வளர்ச்சியை ஊக்குவிக்க மின்சாரத் துறையை வலுப்படுத்துவது அவசியமானது.

இதற்காக உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, அனைவருக்கும் தடையற்ற மின்சாரம் கிடைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியில் இந்தியா பெரும் சாதனை படைத்து வருகிறது.

தற்போது கிட்டத்தட்ட 50 சதவீதத்துக்கும் அதிகமான மின் சக்தி, புதைபடிவமற்ற எரிசக்தி வாயிலாக கிடைக்கிறது. வரும் 2030க்குள், இத்தகைய பசுமை மின் உற்பத்தியை 500 ஜிகாவாட் ஆக உயர்த்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு பிரதமர் கூறினார்.

அணுசக்தியில் புதிய வாய்ப்புகள்

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 'சாந்தி சட்டம் 2025', அணுசக்தித் துறையில் புதிய வாய்ப்புகளுக்கு வழிவகுக்கும்.

இதே போல், 'பிரதமரின் இலவச வீட்டு சூரிய மின் சக்தி' திட்டத்தின் வாயிலாக, மக்கள் தங்களது சொந்த பயன்பாட்டுக்கு தேவையான மின்சாரத்தை தாங்களே உற்பத்தி செய்ய முடியும்.

'ஒரே சூரியன், ஒரே உலகம், ஒரே கிரிட்' என்ற முன்முயற்சி, இத்துறையில் சர்வதேச ஒத்துழைப்பு குறித்த நம் நாட்டின் பார்வையை உணர்த்துகிறது என பிரதமர் தெரிவித்தார்.