பாடங்களை கற்குமா இலங்கை...?
11 மாசி 2026 புதன் 10:21 | பார்வைகள் : 254
இலங்கையை அண்மைக்காலமாக கடுமையாக தாக்கி வருகின்ற இயற்கை அனர்த்தங்கள் வெறும் இயற்கைச் சீற்றங்களாக மட்டும் வந்து செல்லவில்லை. அவை ஒட்டுமொத்த தேசத்திற்கும் மறக்க முடியாத, கசப்பான பல பாடங்களைக் கற்றுக்கொடுக்கின்றன. உதாரணமாக ‘தித்வா’ அனர்த்தமானது பல படிப்பினைகளை கற்றுக்கொடுத்துள்ளது.
இந்த ‘தித்வா’ அனர்த்தம் ஏற்படுத்திய வடுக்கள் மிகவும் ஆழமானவை. 640-க்கும் மேற்பட்ட உயிர்கள் பறிபோனதும், பில்லியன் கணக்கான டொலர் பெறுமதியான சொத்துக்கள் அழிந்ததும், அனர்த்தங்களை எதிர்கொள்ளும் நாட்டின் தயார்நிலை எவ்வளவு பலவீனமாக இருந்துள்ளது என்பதைத் தோலுரித்துக் காட்டியுள்ளது. இயற்கைச் சீற்றங்களைத் தடுத்து நிறுத்த முடியாவிட்டாலும், முறையான முன்னாயத்தங்கள் இருந்தால் உயிரிழப்புகளைக் கண்டிப்பாகக் குறைக்க முடியும் என்பதே ‘தித்வா’ நமக்கு உரக்கச் சொல்லிய பாடமாகும். ஆனால் அனுபவங்களிலிருந்து பாடங்களை கற்கிறோமா என்பதே இங்கு முக்கியமாகும்.
இது குறித்து குறிப்பிட்டுள்ள கொழும்பு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி கணேசமூர்த்தி, இலங்கை இயற்கை அனர்த்தங்களில் இருந்து பாடங்களைக் கற்றுக் கொள்வதாகத் தெரியவில்லை. அனர்த்தங்கள் ஏற்படுகின்றபோது அதனைச் சமாளிப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும். அதனை பின்னர் மறந்து விடும் ஒரு சூழலே காணப்படுகிறது. இந்த விடயத்தில் மக்களுக்கும் விழிப்புணர்வு இல்லை, சம்பந்தப்பட்ட அரசாங்க அதிகாரிகளுக்கும் விழிப்புணர்வு இல்லை என்று குறிப்பிட்டார்.
‘தித்வா’ சூறாவளியினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து உலக வங்கி மற்றும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டம் வெளியிட்டுள்ள பூர்வாங்க அறிக்கைகள் பேரதிர்ச்சியைத் தந்தன. உலக வங்கியின் அறிக்கையின்படி இந்த அனர்த்தத்தினால் ஏற்பட்ட நேரடி பௌதிகப் பாதிப்புகளின் பெறுமதி சுமார் 4.1 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4 சதவீதமாகும். கண்டி, புத்தளம் மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்கள் மிக மோசமான பாதிப்புகளைச் சந்தித்துள்ளன. வீதிகள், பாலங்கள், மின்சாரக் கட்டமைப்புகள் மற்றும் தொலைத்தொடர்பு வசதிகள் என நாட்டின் பொதுக் கட்டமைப்புக்கு மட்டும் 1.735 பில்லியன் டொலர் இழப்பு ஏற்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தின் மதிப்பீட்டின் பிரகாரம் விவசாயத் துறையைப் பொறுத்தவரை பேரிடியாக அமைந்திருக்கிறது. இலங்கையின் வேலைவாய்ப்பில் 30 சதவீதத்தை வழங்கும் இத்துறை, சுமார் 814 மில்லியன் டொலர் இழப்பைச் சந்தித்துள்ளது. 5 இலட்சத்து 30 ஆயிரம் ஹெக்டேயர் நெற்பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கியதால், நாட்டின் உணவுப் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.
சர்வதேச தொழிலாளர் அமைப்பின் தரவுகளின்படி, சுமார் 374,000 தொழிலாளர்கள் தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ தமது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். இது தனிநபர் வருமானத்தில் மாத்திரமன்றி, நாட்டின் பொருளாதார மீட்சியிலும் நீண்டகாலத் தாக்கத்தை ஏற்படுத்தும்.
இவ்வாறு மிகப்பெரிய இழப்புக்களை இந்த அனர்த்தம் ஏற்படுத்தியுள்ள நிலையில் உயிரிழப்புகளைத் தவிர்த்திருக்க முடியுமா என்ற கேள்வி இப்போது பிரதானமாக எழுப்பப்படுகிறது. ‘தித்வா’ புயலின் போது ஏற்பட்ட 800-க்கும் மேற்பட்ட உயிரிழப்புகளில் (காணாமல் போனவர்களையும் சேர்த்து) பெரும்பாலானவற்றைத் தவிர்த்திருக்க முடியும் என்பதுதான் உண்மை.
வளிமண்டலவியல் திணைக்களம் முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்திருந்தும், அந்தத் தகவல்கள் உரிய நேரத்தில் அடிமட்ட மக்களைச் சென்றடையவில்லை. தகவல் தொடர்புச் சங்கிலியில் ஏற்பட்ட முறிவே இத்தனை பெரிய உயிர்ச் சேதத்திற்குக் காரணமாக அமைந்ததா என்ற கேள்வி எழுகிறது. மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு முன்கூட்டியே அப்புறப்படுத்தியிருந்தால், பல நூறு குடும்பங்கள் இன்று தமது உறவுகளை இழந்திருக்காது.
இது குறித்து சுட்டிக்காட்டும் கலாநிதி கணேசமூர்த்தி, உலகில் காலநிலை மாற்றத்தால் ஆபத்துமிக்க நாடுகளில் ஒன்றாக இலங்கை உருவாகி வருகிறது. வெள்ளங்கள், மண்சரிவுகள், பலத்த காற்று போன்றவை தொடர்ந்து இடம்பெறுகின்றன. எனவே, அதற்கேற்ற முறையில் இலங்கை தயாராக வேண்டும். அதற்கான முன்னெச்சரிக்கைகள் மற்றும் அத்தியாவசிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். ஆனால் அதற்கான தயார் நிலை இலங்கையிடம் இருக்கின்றதா என்றால் இல்லை என்றே கூற வேண்டும். முன்னறிவிப்பு விடயத்தில் சரியான தொழில்நுட்ப ரீதியான முன்னேற்றமும் இலங்கையிடம் இல்லாமலிருக்கின்றது. அந்த முன்னேற்றத்தையும் இலங்கை ஏற்படுத்திக் கொண்டால்தான் உயிரிழப்புகள் ஏற்படுவதை இனியாவது தடுக்க முடியும் என்று கூறுகிறார்.
இவ்விடயத்தில் இந்தியா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகள் சிறந்த முன்மாதிரிகளாகத் திகழ்கின்றன. இந்தியாவின் ஒடிசா மாநிலம் ஒரு காலத்தில் புயல்களால் ஆயிரக்கணக்கான உயிர்களை இழந்தது. ஆனால் இன்று, அங்குள்ள 'பூச்சிய உயிரிழப்பு' கொள்கையினால், ஒரு மில்லியன் மக்களை வெறும் 36 மணி நேரத்தில் அப்புறப்படுத்தும் திறன் அவர்களுக்கு உள்ளது. அதேபோன்று, ஜப்பானில் நிலநடுக்கமும் சுனாமியும் அடிக்கடி ஏற்பட்டாலும், அங்குள்ள அதிநவீன முன்னெச்சரிக்கை பொறிமுறை மற்றும் மக்களின் தயார்நிலை காரணமாக உயிரிழப்புகள் மிகக் குறைவாகவே இருக்கின்றன. இத்தகைய நாடுகளிடமிருந்து இலங்கையும் தொழில்நுட்ப மற்றும் முகாமைத்துவப் பாடங்களைக் கற்க வேண்டும்.
மத்திய மலைநாட்டுப் பகுதிகளில் ஏற்பட்ட மண்சரிவுகள் மனிதத் தவறுகளையும் சுட்டிக்காட்டுகின்றன. தேசிய கட்டடவியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் அங்கீகாரம் இன்றி ஆபத்தான சரிவுகளில் வீடுகள் அமைக்கப்படுவதும், முறையற்ற குடியேற்றங்களுமே அதிக உயிரிழப்புகளுக்குக் காரணமாகின்றன. காடழிப்பு மற்றும் முறையற்ற நிலப்பயன்பாடு காரணமாக மண்ணின் உறுதித்தன்மை குறைந்து, சிறிய மழைக்கே நிலச்சரிவுகள் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளது.
"இந்தக் காலநிலை மாற்றம் மற்றும் இயற்கை அனர்த்தங்களால் மலையக மக்களே பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர். மண்சரிவு, வெள்ளம் போன்றவை அங்கு இடம்பெறுகின்றன. ஆனால் இன்றும் கூட வாழ்வதற்கு ஆபத்தான பகுதிகளில் உள்ள வீடுகளில் மலையக மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு அகற்றுவதற்கான திட்டங்கள் எதுவும் இல்லை. அனர்த்தங்கள் ஏற்படும்போது அவர்கள் அங்கிருந்து இடம்பெயர்ந்து பொது இடங்களில், பாடசாலைகளில் தங்கியிருக்கிறார்கள். பின்னர் பழைய இடத்திற்கே சென்று விடுகிறார்கள்.
எனவே, இந்த ஆபத்தான பகுதிகளில் இருக்கின்ற மக்களை அடையாளம் கண்டு அவர்களைப் பாதுகாப்பான இடங்களில் குடியேற்ற வேண்டும். இந்த விடயத்தில் பொதுமக்கள், அரசாங்கம் எனச் சகல தரப்பினருக்கும் பாரிய பொறுப்புணர்வு இருக்கின்றது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்’’ என்றும் கலாநிதி கணேசமூர்த்தி சுட்டிக்காட்டியுள்ளார்.எனவே, எதிர்காலத்தில் மலையகத்தில் மேற்கொள்ளப்படுகின்ற கட்டுமானங்களில் கடுமையான விதிமுறைகளைப் பின்பற்றுவதும், ஆபத்தான பகுதிகளில் வசிக்கும் மக்களைப் பாதுகாப்பான இடங்களில் மீள்குடியேற்றுவதும் காலத்தின் கட்டாயமாகும்.
காலநிலை மாற்றம் என்பது இனிவரும் காலங்களில் ஒரு நிரந்தர அச்சுறுத்தலாக இருக்கப்போகிறது. இலங்கை உலகளாவிய கார்பன் வெளியேற்றத்தில் மிகக் குறைந்த பங்களிப்பையே (1.2%) செய்தாலும், அதன் பாதிப்புகளை அதிகமாகச் சுமக்கும் நாடுகளில் ஒன்றாக உள்ளது.
எதிர்பாராத நேரங்களில் பெய்யும் அதீத மழை மற்றும் நீண்டகால வறட்சி என காலநிலை மாற்றத்தின் கோர முகத்தை நாம் தொடர்ந்து சந்தித்து வருகிறோம். எனவே, இதனை ஒரு சாதாரண அனர்த்தமாகப் பார்க்காமல், தேசியப் பாதுகாப்பு பிரச்சினையாகக் கருதி, நீண்டகாலத் திட்டமிடல்களை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும்.
அனர்த்த முகாமைத்துவத்துக்காக அரசாங்கம் ஒதுக்கும் நிதியை ஒரு செலவாகப் பார்க்காமல், அது மக்களைப் பாதுகாப்பதற்கான ஒரு 'முதலீடாகப்' பார்ப்பது அவசியமாகும். ஒவ்வொரு பிரதேசத்திலும் முறையான தற்காலிக முகாம்கள், குடிநீர் மற்றும் சுகாதார வசதிகளுடன் கூடிய பாதுகாப்பு நிலையங்கள் உருவாக்கப்பட வேண்டும். குறிப்பாக, பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு இத்தகைய சூழல்களில் உறுதி செய்யப்படுவது தீர்க்கமானதாகும்.
இலங்கையின் மீட்சிக்கு சர்வதேச நாடுகளின் உதவி தற்போது மிக அவசியமான ஒன்றாக உள்ளது. இலங்கை சர்வதேச உதவி வழங்கும் மாநாட்டையும் நடத்தவுள்ளது. எனினும், வெளிநாட்டு உதவிகளில் மட்டும் தங்கியிருக்காமல், உள்நாட்டில் அனர்த்தங்களை எதிர்கொள்ளும் 'முன்னெச்சரிக்கை பொறிமுறையை' (Early Warning System) வலுப்படுத்துவதே எதிர்கால அனர்த்தங்களிலிருந்து மக்கள் தம்மை பாதுகாத்துக்கொள்வதற்கான நிலையான தீர்வாகும். நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஒவ்வொரு குடிமகனின் கைபேசிக்கும் எச்சரிக்கை செய்திகள் சென்றடைவதை உறுதி செய்வது தீர்க்கமான ஒன்றாக அமையும்.
அனர்த்தங்களின்போது "தயார்நிலை என்பது ஒரு தெரிவு அல்ல, அது உயிர்வாழ்வதற்கான அவசியம்" என்பதே ‘தித்வா’ சூறாவளி எமக்கு உணர்த்திய முக்கியமான பாடமாகும். இயற்கை அனர்த்தங்களைத் தடுத்து நிறுத்த மனிதனால் முடியாது, ஆனால் தொழில்நுட்ப வளர்ச்சியையும் முறையான திட்டமிடலையும் கொண்டு அதன் பாதிப்புகளைப் பெருமளவு குறைக்க முடியும். கடந்தகாலத் தவறுகளிலிருந்து பாடம் கற்று, அரசாங்கம், நிபுணர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் மட்டுமே, எதிர்காலச் சீற்றங்களிலிருந்து இலங்கையையும் இலங்கை மக்களையும் பாதுகாக்க முடியும்.
நன்றி virakesari
🔥 இன்றைய சிறப்பு சலுகை
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திருமதி,ஏகாம்பரம் சிரோன்மணி
பிரான்ஸ், யாழ் புங்குடுதீவு
வயது : 76
இறப்பு : 02 Feb 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan