Paristamil Navigation Paristamil advert login

சீன - ரஷ்ய பொருளாதார பரஸ்பர ஒத்துழைப்பு தொடருமா...?

 சீன - ரஷ்ய பொருளாதார பரஸ்பர ஒத்துழைப்பு  தொடருமா...?

5 மாசி 2026 வியாழன் 17:47 | பார்வைகள் : 499


சீனா - ரஷ்யா ஆகிய இரு நாடுகளின் ஜனாதிபதிகளும் நேற்று புதன்கிழமை (4) வீடியோ அழைப்பில் பேசி, கலந்துரையாடியதில், பொருளாதாரம் உட்பட பல்வேறு துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர ஒத்துழைப்பு இனியும் தொடரும் என உறுதிபடக் கூறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஆகிய இருவரும் நேற்று வீடியோ கொன்பிரன்ஸில் பேசிக்கொண்டபோது தமக்கிடையிலான வர்த்தக உறவின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளனர்.

எரிசக்தி, பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளும் தொடர்ச்சியாக இணைந்து செயற்படுவதென உறுதி செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

“இரண்டாம் உலகப் போரில் வெற்றி பெற்ற 80வது ஆண்டு நிறைவை கடந்த ஆண்டு மொஸ்கோவிலும் பெய்ஜிங்கிலும் முறையாகக் கொண்டாடினோம். அவற்றை நாம் இணைந்து கொண்டாடியதன் மூலம் வரலாற்று உண்மையை நிலைநிறுத்தவும் உலகில் அமைதியை மீட்டெடுக்க கோடிக்கணக்கான உயிர்களை தியாகம் செய்த நமது மக்களின் வீரத்தை நினைவுகூர்ந்து, நமது  இரு நாடுகளின் ஒற்றுமையையும் பாதுகாக்கத் தயாராக இருப்பதை ரஷ்யாவும் சீனாவும் உலகிற்கு நிரூபித்துள்ளது.

நமது இரு நாடுகளின் இறையாண்மை, பாதுகாப்பு, சமூக பொருளாதார செழிப்பு, மக்கள் தங்களது வாழ்க்கையின் முன்னேற்றப் பாதையைத் தேர்ந்தெடுக்கும் உரிமையைப் பெறுவது ஆகியவற்றை உறுதி செய்வதற்கான நமது அனைத்து கூட்டு முயற்சிகளுக்கும் எமது ஆதரவை உறுதிப்படுத்த விரும்புகிறேன்” என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்தார்.

கடந்த ஒரு வருடமாக, நமது இரண்டு சந்திப்புகளும் சீன - ரஷ்ய உறவுகளை ஒரு புதிய கட்ட வளர்ச்சிக்கு இட்டுச் செல்ல உதவியுள்ளன” என சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் கூறினார்.

அத்துடன் அவர், “இரண்டாம் உலகப் போரின் விளைவுகளையும் சர்வதேச நீதிக் கொள்கைகளையும் நிலைநிறுத்துவதற்காக தம்மால் பகிரப்பட்ட தீர்மானத்தை மீண்டும் உறுதிப்படுத்தி, பாசிச எதிர்ப்புக் கூட்டணியின் வெற்றியினது 80வது ஆண்டு நிறைவை நாங்கள் மனதார நினைவுகூர்ந்தோம்.

நமது இரு நாடுகளின் வர்த்தகமும் சீராக வளர்ந்து வருகிறது. அதேவேளை புதிய துறைகளின் முன்னேற்றத்துக்கான ஒத்துழைப்பும் துரிதப்படுத்தப்படுகிறது.

மேலும், நமது கலாசார மற்றும் மனிதாபிமான உறவுகளும் புதிய உயரத்தை எட்டியுள்ளன. மக்களிடையேயான கருத்துப் பரிமாற்றங்களும் முன்னரை விட துடிப்பானதாக காணப்படுகிறது.

2026 ஆண்டானது சீனாவின் 15வது ஐந்தாண்டு திட்டத்தின் முதல் ஆண்டாக உள்ளது. இக்காலகட்டத்தில் உயர்தர வளர்ச்சியை மேலும் விரிவுபடுத்த சீனா உறுதிபூண்டுள்ளது.

அத்துடன் புதிய வளர்ச்சிக் கட்டத்தின் புதிய வாய்ப்புகளை ரஷ்யா உட்பட அனைத்து நாடுகளுடனும் பகிர்ந்துகொள்ளவும் சீனா தயாராக உள்ளது” என  சீன ஜனாதிபதி தெரிவித்தார். 
 

வர்த்தக‌ விளம்பரங்கள்