Paristamil Navigation Paristamil advert login

இலங்கையர்களை சமூக வலைதள மோசடிகளில் சிக்க வேண்டாம் என எச்சரிக்கை

இலங்கையர்களை சமூக வலைதள மோசடிகளில் சிக்க வேண்டாம் என எச்சரிக்கை

2 மாசி 2026 திங்கள் 17:22 | பார்வைகள் : 1352


சமூக வலைதளங்கள் மற்றும் ஏனைய வழிகள் ஊடாக வெளிநாட்டு வேலைவாய்ப்பை எதிர்பார்ப்போர், ஆள் கடத்தல் மற்றும் பல்வேறு மோசடிகளில் சிக்குவது அதிகரித்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக, ஆள் கடத்தலுக்கு எதிரான சட்டம், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகச் சட்டம் மற்றும் விசாரணைகள் தொடர்பாக பொலிஸ் அதிகாரிகளுக்கு விழிப்புணர்வு வழங்கும் வேலைத்திட்டங்களை முன்னெடுக்க அந்தப் பணியகம் தீர்மானித்துள்ளது.

இதன் முதற்கட்ட வேலைத்திட்டம் அண்மையில் அனுராதபுரம் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் வெற்றிகரமாக நடத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதேச மக்களுக்கு மிகவும் நெருக்கமான மற்றும் உள்ளூர் அளவில் சட்டத்தை அமுல்படுத்தும் குழுவினரான பொலிஸ் அதிகாரிகளுக்கு விழிப்புணர்வு வழங்குவதன் மூலம், மக்களுக்கு மிகவும் துல்லியமான மற்றும் வினைத்திறனான சேவையை வழங்க முடியும் என பணியகம் எதிர்பார்க்கிறது.

தற்போது அதிகளவிலான இலங்கையர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளில் ஆர்வம் காட்டி வரும் நிலையில், அவர்கள் மோசடியாளர்களிடம் சிக்குவதைத் தடுப்பதும், மோசடியாளர்களுக்கு எதிராக எடுக்கக்கூடிய சட்ட நடவடிக்கைகள் குறித்து தெளிவுபடுத்துவதுமே இந்த வேலைத்திட்டத்தின் நோக்கமாகும்