Paristamil Navigation Paristamil advert login

ஈரான் தொடர்பில் அமெரிக்க பிரஜைகளுக்கு அவசர எச்சரிக்கை

ஈரான் தொடர்பில் அமெரிக்க பிரஜைகளுக்கு அவசர எச்சரிக்கை

28 மாசி 2026 சனி 06:30 | பார்வைகள் : 288


எந்தவொரு காரணத்திற்காகவும் அமெரிக்க பிரஜைகள் ஈரானுக்கு பயணம் செய்ய வேண்டாம் எனவும், தற்போது அங்கு தங்கியிருப்பவர்கள் உடனடியாக வெளியேறுமாறும் அமெரிக்கா உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

தவறான முறையில் நபர்களை தடுத்து வைக்கும் அரச ஆதரவு பெற்ற நாடாக ஈரானை அமெரிக்கா பெயரிட்டுள்ளதுடன், இது தொடர்பான விசேட அறிக்கையையும் வெளியிட்டுள்ளது.

சுமார் 47 ஆண்டுகளுக்கு முன்னர் ஈரானில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட போது, அயத்துல்லா கொமேனி அமெரிக்க தூதரக அதிகாரிகளை பிணைக் கைதிகளாகப் பிடித்ததை அங்கீகரித்தே தனது அதிகாரத்தை உறுதிப்படுத்திக் கொண்டதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த பல தசாப்தங்களாக ஏனைய நாடுகளுக்கு எதிராக அரசியல் ஆதாயங்களைப் பெறுவதற்காக நிராயுதபாணிகளான அமெரிக்க பிரஜைகளையும் ஏனைய நாட்டு மக்களையும் ஈரான் மனிதாபிமானமற்ற முறையில் தடுத்து வைத்து வருவதாகவும், இத்தகைய அருவருக்கத்தக்க செயல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் எனவும் அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

இந்த நிலையில், வெளிநாடுகளில் தவறான முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அமெரிக்கர்களைப் பாதுகாப்பதற்காக ட்ரம்ப் கடந்த காலத்தில் விசேட நிறைவேற்று உத்தரவொன்றைப் பிறப்பித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து அமெரிக்க காங்கிரஸினால் "2025 தவறான தடுப்புக்காவலுக்கு எதிரான சட்டம்" (Countering Wrongful Detention Act of 2025) நிறைவேற்றப்பட்டது.

இச்சட்டத்தின் கீழ் ஈரானை இப்பட்டியலில் உள்வாங்குவதற்கு அந்நாட்டின் இராஜாங்க திணைக்களத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரான் தனது இத்தகைய செயற்பாடுகளை நிறுத்தத் தவறினால், அமெரிக்க கடவுச்சீட்டுகளைப் பயன்படுத்தி ஈரானுக்குச் செல்வதற்கோ அல்லது அந்த நாட்டின் ஊடாகப் பயணம் செய்வதற்கோ புவியியல் ரீதியான பயணத் தடைகளை விதிக்க நேரிடும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது.

ஈரானிய அரசாங்கம் பிணைக் கைதிகளைப் பிடிப்பதை நிறுத்துவதுடன், அநீதியான முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து அமெரிக்கர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.

இக்கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டால் மட்டுமே தற்போது விதிக்கப்பட்டுள்ள பெயரிடல்கள் மற்றும் அது தொடர்பான தடைகளை நீக்க முடியும் என அஞ்சல் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.