Paristamil Navigation Paristamil advert login

அமெரிக்கப் படகு மீது கியூபா துப்பாக்கிச் சூடு - 04 பேர் உயிரிழப்பு

அமெரிக்கப் படகு மீது கியூபா துப்பாக்கிச் சூடு - 04 பேர் உயிரிழப்பு

26 மாசி 2026 வியாழன் 05:46 | பார்வைகள் : 188


கியூபாவின் வடக்குக் கடற்பரப்பில் நுழைந்த அமெரிக்க அதிவேகப் படகு மீது எல்லைப் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 04 பேர் உயிரிழந்துள்ளதாக கியூப அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இந்தச் சம்பவம் இரு நாடுகளுக்கும் இடையிலான ஏற்கனவே நிலவும் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.

கியூபாவின் உள்நாட்டு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மத்திய வில்லா கிளாரா மாகாணத்தில் உள்ள காயோ பால்கோனஸ் அருகே புதன்கிழமை (25) காலை இந்தப் படகு கண்டறியப்பட்டது.

கியூப எல்லைப் பாதுகாப்புப் படையினர் அடையாளத்தைக் கண்டறியப் படகை நெருங்கியபோது, அதிலிருந்தவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாவும், அதில் கியூப கமாண்டர் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதற்குப் பதிலடியாகக் கியூப படையினர் நடத்திய தாக்குதலில் படகில் இருந்த 04 பேர் உயிரிழந்துள்ளனர். 06 பேர் காயமடைந்துள்ளனர்.  காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த நான்கு பேரும் அமெரிக்காவில் வசிக்கும் கியூப நாட்டவர்கள் என கியூப அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் மார்கோ ரூபியோ,

"கடல் பகுதியில் இத்தகைய துப்பாக்கிச் சூடு நடப்பது மிகவும் அசாதாரணமானது. படகில் இருந்தவர்களின் விபரங்கள் இன்னும் முழுமையாகத் தெரியவில்லை. கியூப அரசு வழங்கும் தகவல்களை மட்டும் நாங்கள் நம்பப்போவதில்லை. அமெரிக்கா இது குறித்துத் தனிப்பட்ட முறையில் தீர விசாரணை நடத்தும்," எனத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கக் கடலோரக் காவற்படை தற்போது அந்தப் பகுதிக்கு விரைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வர்த்தக‌ விளம்பரங்கள்