Paristamil Navigation Paristamil advert login

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் - பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் சுரேஷ் சலே கைது

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் - பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் சுரேஷ் சலே கைது

25 மாசி 2026 புதன் 11:33 | பார்வைகள் : 170


அரச புலனாய்வுப் பிரிவு  முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரை 72 மணிநேரம் தடுத்து வைத்து விசாரணை செய்ய பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.

முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால்  இன்று புதன்கிழமை (25)  காலை பேலியகொட பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான மீள் விசாரணைகளின் ஒரு கட்டமாகவே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

இன்று பொலிஸ் ஊடகப் பிரிவில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போது இது தொடர்பான மேலதிக விபரங்கள் வெளியிடப்பட்டன:

மேற்கு மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சஜீவ மெதவத்த கருத்துத் தெரிவிக்கையில்,

"உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாகக் கிடைத்துள்ள வலுவான சாட்சியங்களின் அடிப்படையிலேயே சுரேஷ் சலே கைது செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து நீண்டகால விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளதால், மேலதிக தகவல்களை இப்போதைக்கு வெளியிட முடியாது" எனத் தெரிவித்தார்.

கைதுக்கான காரணத்தை உடனடியாக அறிவிக்காமல் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டமைக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் முன்னெடுக்கப்படும் பிரசாரங்கள் குறித்து ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த சஜீவ மெதவத்த, "அவரைக் கைது செய்யாமல் இருந்திருந்தால் தான் பொலிஸாருக்கு எதிராக பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டிருக்க வேண்டும். பொலிஸார் தமது கடமையைச் சரியாகச் செய்துள்ளனர்" எனக் குறிப்பிட்டார்.

சுரேஷ் சலேவிடம் முன்னெடுக்கப்படவுள்ள விசாரணைகளின் ஊடாக, உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னால் உள்ள 'மகா சூத்திரதாரி'  தொடர்பான தகவல்களை வெளிப்படுத்த முடியும் என பொலிஸார் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

சட்டப்பிரிவுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜாலிய சேனாரத்ன தெரிவிக்கையில்,

"பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் ஒருவரைக் கைது செய்தால் 3 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய முடியும். அதன்பின்னர் தேவைப்படின், சாட்சியங்களின் அடிப்படையில் தடுப்புக்காவல் உத்தரவைப் பெற்று மேலதிக காலம் தடுத்து வைக்கவும் சட்டத்தில் இடமுண்டு" என்றார்.

பொதுமக்கள் தெரிந்துகொள்ள வேண்டிய மேலதிக தகவல்கள் உரிய நேரத்தில் வெளியிடப்படும் எனவும் பொலிஸார் இதன்போது உறுதியளித்தனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்