Paristamil Navigation Paristamil advert login

ஜப்பானில் தண்ணீர் குழாயை சரி செய்ய 31 கிலோ தங்கத்தை தானம் வழங்கிய மர்ம நபர்

ஜப்பானில் தண்ணீர் குழாயை சரி செய்ய 31 கிலோ தங்கத்தை தானம் வழங்கிய மர்ம நபர்

22 மாசி 2026 ஞாயிறு 10:25 | பார்வைகள் : 192


ஜப்பானில், தண்ணீர் குழாயை சரி செய்ய மர்ம நபர் ஒருவர் 31 கிலோ தங்கத்தை தானமாக வழங்கியுள்ளார்.

ஜப்பானின் கன்சாய் பகுதியில் அமைந்துள்ள ஒசாகா(Osaka) நகரத்தில் சுமார் 30 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர்.

இது ஜப்பானின் 3வது பெரிய நகரமாகவும், வணிக மையமாகவும் உள்ளது.  

ஜப்பானில் 20 சதவீதத்திற்கும் மேற்பட்ட தண்ணீர் குழாய்கள், 40 ஆண்டுகாலமாக மாற்றப்படாமலே உள்ளது.

2024 ஆம் ஆண்டில், ஒசாகா நகரின் சாலைகளுக்கு அடியில் 90க்கும் மேற்பட்ட தண்ணீர் குழாய் கசிவுகள் பதிவாகியுள்ளதாக நகரின் நீர்வழங்கல் பணியகம் தெரிவித்துள்ளது.  கடந்த ஆண்டில், ஜப்பானின் சைட்டாமா மாகாணத்தில் ஒரு பெரிய புதைகுழியில் லாரி விழுந்து அதன் ஓட்டுநர் உயிரிழந்தார். கழிவுநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பாலே இந்த சம்பவம் ஏற்பட்டதாக நம்பப்பட்டதால், நாடு முழுவதும் பழைய நீர் குழாய்களை மாற்றுவதற்கான விவாதம் எழுந்தது.

ஆனால் ஒசாகாவில் மொத்தம் 259 கிலோமீட்டர் நீர் குழாய்களைப் புதுப்பிக்க வேண்டும் எனவும் 2 கிலோமீட்டர் நீர் குழாய்களைப் புதுப்பிக்க சுமார் 500 மில்லியன் யென் (3.2 மில்லியன் டொலர்) செலவாகும் என்று ஒசாகா நகர நீர்வழி அதிகாரி எய்ஜி கோட்டானி கூறினார்.

பழைய நீர் அமைப்பை சரிசெய்ய, நீர்வழிப் பணியகத்திற்கு பெயர் வெளியிட விரும்பாத நபர் ஒருவர் 21 கிலோ தங்க கட்டிகளை நன்கொடையாக வழங்கியுள்ளதாக ஒசாகா நகர மேயர் ஹிடேயுகி யோகோயாமா( Hideyuki Yokoyama) தெரிவித்துள்ளார். இதன் இந்திய மதிப்பு சுமார் ரூ.32 கோடி ஆகும்.

மேலும், அதே மர்ம நன்கொடையாளர் முன்பு நகராட்சி நீர்வழங்கல் திட்டங்களுக்கு 5,00,000 யென்(3,000 டொலர்) ரொக்கமாக வழங்கியதாக தெரிவித்துள்ளார்.

அந்தத் தொகை அதிர்ச்சியூட்டும் வகையில் இருப்பதாகவும், தண்ணீர் குழாய்களை சரி செய்வது உட்பட நல்ல திட்டங்களுக்கு இதனை பயன்படுத்த உள்ளதாக மேயர் தெரிவித்துள்ளார். 

வர்த்தக‌ விளம்பரங்கள்