Paristamil Navigation Paristamil advert login

பத்திரிகையால் மோசடி புகாரில் சிக்கினார் செல்வப்பெருந்தகை!

பத்திரிகையால் மோசடி புகாரில் சிக்கினார் செல்வப்பெருந்தகை!

22 மாசி 2026 ஞாயிறு 10:46 | பார்வைகள் : 200


ஸ்ரீபெரும்புதூர் தொகுதி  காங்கிரஸ் எம்எல்ஏ., செல்வப்பெருந்தகை, தேர்தலில் மோசடி செய்து வெற்றி பெற்றுள்ளதால் அவர் மீது கடும் நடவடிக்கை வேண்டும் என்று பாஜ  தலைமை செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.

இணைக்கப்பட்டுள்ள திருமண நிச்சயதார்த்த அழைப்பிதழானது காங்கிரஸ் கட்சி தலைவரும், ஸ்ரீபெரும்புதூர் தொகுதி சட்டமன்ற  உறுப்பினருமான செல்வப்பெருந்தகை மகளின் நிச்சயதார்த்த அழைப்பிதழ். மணம் முடிக்க காத்திருக்கும் மணமக்களுக்கு நம் வாழ்த்துகளும், ஆசிகளும்.

இந்த அழைப்பிதழ் செல்வப்பெருந்தகையால் பதிவு செய்யப்பட்டது. இந்த அழைப்பிதழின் வாசகங்கள் செல்வப்பெருந்தகை கிருஸ்துவ மதத்தை சார்ந்தவர் என்பதை உறுதிபட தெரிவிக்கின்றது.

செல்வப்பெருந்தகை  கிருஸ்துவராகவோ, இஸ்லாமியராகவோ, ஹிந்துவாகவோ இருப்பதில் நமக்கு எந்த பிரச்னையும் இல்லை, ஆட்சேபனையும் இல்லை.

ஆனால், ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற தொகுதியானது,  பட்டியிலின சமுதாயத்திற்கு ஒதுக்கப்பட்ட தொகுதி (Reserved Constituency) என்பதும், அந்த தொகுதியில் பட்டியலினத்தை சார்ந்தவர்கள் மட்டுமே போட்டியிட வேண்டும்.

தாங்கள் கிறிஸ்துவ மதத்தை பின்பற்றுபவர் என்பதை மறைத்து, ரிசர்வ் தொகுதியில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவரை தகுதி நீக்கம் செய்யும் வகையில் பல்வேறு தீர்ப்புகள் ஏற்கனவே நீதிமன்றங்களால் வழங்கப்பட்டுள்ளன.

செல்வப்பெருந்தகை , உண்மையை மறைத்து இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மீறி, மோசடி

செய்து தேர்தலில் போட்டியிட்டிருப்பது தெளிவாகிறது. காங்கிரஸ் கட்சியின் தலைவர் இந்த மோசடியில் ஈடுபட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது மட்டுமல்ல; வெட்கக்கேடான செயல். பட்டியிலின மக்களுக்கு காங்கிரஸ் கட்சி செய்துள்ள மிகப்பெரிய துரோகமாகும்.

தெரிந்தே இந்த குற்றச்செயலில் ஈடுபட்டுள்ள செல்வப்பெருந்தகை  பதவி விலக வேண்டும், காங்கிரஸ் கட்சி பட்டியிலின மக்களிடம் மன்னிப்பு கேட்பதோடு, செல்வப்பெருந்தகையின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

செல்வப்பெருந்தகை வெற்றி செல்லாது என்பதை சட்ட ரீதியாக உறுதி செய்வதோடு, அரசியலமைப்பு சட்டத்தை மீறிய குற்றத்திற்காக செல்வப்பெருந்தகையின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.இவ்வாறு நாராயணன் திருப்பதி அறிக்கையில் கூறியுள்ளார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்