Paristamil Navigation Paristamil advert login

பாஜவின் பிடிக்குள் அதிமுக போய்விட்டது; திருமாவின் இன்றைய குறி!

பாஜவின் பிடிக்குள் அதிமுக போய்விட்டது; திருமாவின் இன்றைய குறி!

22 மாசி 2026 ஞாயிறு 09:41 | பார்வைகள் : 168


தினம் தினம் எதிர்க்கட்சிகளை மட்டும் குறை கூறும் வழக்கம் கொண்ட திருமாவளவன் இன்று (பிப்ரவரி 21) நிருபர்கள் சந்திப்பில், 'அதிமுக, பாஜவின் பிடிக்குள் போய்விட்டது' என குற்றம் சாட்டினார்.

மதுரையில் நிருபர்கள் சந்திப்பில், எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ்யின் தாய்மொழி நாள் வாழ்த்து பதிவில் காவி நிறத்தில் திருவள்ளுவர் உருவப்படம் இருந்தது குறித்த கேள்விக்கு திருமாவளவன் அளித்த பதில்: அதிமுக பாஜவின் பிடிக்குள் போய்விட்டது. மெல்ல மெல்ல அது காவி மையம் ஆகிறது என்ற கருத்தை நான் ஏற்கனவே கூறியிருக்கிறேன்.

கவலையை வெளிப்படுத்தி இருக்கிறேன். அதற்கு சான்றாக தான் இந்தப் பதிவும் அமைந்திருக்கிறது. ஈவெரா பாசறையில் தோன்றிய இயக்கம், அண்ணாதுரை, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் தலைமையில் இயங்கிய ஒரு திராவிட இயக்கம்  இன்றைக்கு சங்பரிவார் பிடிக்குள் சிக்கி இருக்கிறது என்பது கவலை அளிக்கிறது.

அவர்கள் வெற்றி பெற்றால், அதாவது அதிமுக வெற்றி பெற்றால் ஆர்எஸ்எஸ் தான் நாட்டை ஆளும், அதில் யாருக்கும் ஐயம் தேவையில்லை என்பதை அவ்வப்போது நான் சுட்டிக் காட்டி இருக்கிறேன். திருவள்ளுவருக்கு காவி பூசக்கூடிய வேலையை துணிச்சலாக, இபிஎஸ் சமூக ஊடக பக்கத்திலேயே பதிவு செய்யக்கூடிய அளவுக்கு நிலைமை மாறி இருப்பது வேதனை அளிக்கிறது.

தற்போது அந்தப் பதிவை அப்புறப்படுத்தி இருக்கிறார்கள் என்ற செய்தி ஆறுதல் அளிக்கிறது. ஆனாலும் அதிமுக தலைவர்கள் கவனமாகவும், எச்சரிக்கையாகவும் செயல்பட வேண்டும். இல்லையெனில் அவர்கள் தங்களது சுயமரியாதையை இழக்க நேரும் என்பதை அந்த இயக்கத்தின் மீது உள்ள நன்மதிப்பின் அடிப்படையில் ஒரு கருத்தாக இதை நான் முன் வைக்கிறேன். இவ்வாறு திருமாவளவன் கூறினார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்