Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

சுதா கொங்கரா எடுத்த அதிரடி முடிவு ....

சுதா கொங்கரா எடுத்த அதிரடி முடிவு ....

29 மார்கழி 2025 திங்கள் 13:28 | பார்வைகள் : 199


சினிமாவில் பெண்கள் இயக்குனராக சாதிப்பது அரிதான ஒன்றாகவே இருந்து வருகிறது. அப்படி தமிழ் சினிமாவில் ஒரு பெண் இயக்குனராக மிகப்பெரிய உச்சத்தை தொட்டவர் தான் சுதா கொங்கரா. இயக்குனர் மணிரத்தினம், பாலா ஆகியோரிடம் பணியாற்றிய இவர் துரோகி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அப்படம் பெரிய அளவில் பேசப்படவில்லை. இதை எடுத்து மாதவனை வைத்து இறுதிச்சுற்று என்கிற திரைப்படத்தை இயக்கினார். அப்படம் இந்திய அளவில் மிகப்பெரிய அளவில் ஹிட் ஆகி தேசிய விருதையும் பெற்று தந்தது.

இறுதிச்சுற்று படத்தின் வெற்றிக்கு பின்னர் சூர்யாவுடன் கூட்டணி அமைத்த சுதா கொங்கரா, அவரை வைத்து சூரரைப் போற்று திரைப்படத்தை இயக்கினார். கடந்த 2020 ஆம் ஆண்டு நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் ஆன அப்படம் மிகப்பெரிய வெற்றியை ருசித்தது. இப்படத்திற்கும் ஆறு தேசிய விருதுகள் கிடைத்தன. குறிப்பாக நடிகர் சூர்யாவுக்கு முதல் தேசிய விருதை பெற்றுத் தந்த படம் இதுவாகும். சூரரைப்போற்று படத்தின் வெற்றிக்குப் பின்னர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பராசக்தி.

சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்துள்ள இப்படம் வருகிற ஜனவரி 10ந் தேதி பொங்கல் விருந்தாக திரைக்கு வர உள்ளது. இப்படத்தில் சிவகார்த்திகேயன் உடன் அதர்வா, ரவி மோகன், ஸ்ரீலீலா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இப்படம் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் உயிர்நீத்த ராசேந்திரனின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் படம் என்று பரவலாக பேசப்பட்டது. ஆனால் இதை சமீபத்திய பேட்டியில் மறுத்துள்ள சுதா கொங்கரா, இப்படம் இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளதாகவும், சூரரைப் போற்று போல இதுவும் உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள ஒரு கர்ப்பனை கதை என்று விளக்கம் அளித்துள்ளார்.

அதேபோல் பராசக்தி பட புரமோஷனுக்காக அளித்த பேட்டியில் மற்றுமொரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டு இருக்கிறார் சுதா கொங்கரா. எல்லா விதமான கதைகளையும் படமாக்க வேண்டும் என்றும் விரும்பினாலும், தான் விரைவில் சினிமாவில் இருந்து ஓய்வு பெற இருப்பதாகவும், சோர்வடைந்துவிட்டதால் தான் இத்தகைய முடிவை எடுத்திருப்பதாகவும் சுதா கொங்கரா கூறி இருக்கிறார். அவரின் இந்த முடிவு ரசிகர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்ந்து பேசிய சுதா கொங்கரா, தனக்கு ஒரு முழுநீள காதல் கதையை உருவாக்க ஆசை இருப்பதாகவும், அதற்கான கதை தன்னிடம் தயாராக இருப்பதாக கூறி இருக்கிறார். அதேபோல் தான் ரஜினிகாந்தின் தீவிர ரசிகை என்றும் அவரை வைத்து முதல் மரியாதை போன்று ஒரு படத்தை எடுக்க ஆசைப்படுவதாக கூறி இருக்கிறார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்